Saturday, February 09, 2019

அறியாமைக் காலத்தின் மீள் வரவு!

லகளவில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் பெருமளவில் குறைந்து வருகிறது என்ற அதிர்ச்சித் தகவலைத் தெரிவிக்கின்றன அண்மைய புள்ளிவிபரங்கள். இதில் சர்வதேச அளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. முதலிடத்தில் இருக்கும் சீனாவில் 1௦௦ ஆண் குழந்தைகளுக்கு 87 பெண் குழந்தைகள். இந்தியாவில் 1௦௦ ஆண் குழந்தைகளுக்கு 89 பெண் குழந்தைகள்.

இந்தச் சரிவு விகிதப் பட்டியலில் இந்திய அளவில் முன்னணியில் இருப்பது தென்னிந்திய மாநிலங்களே என்பது இன்னொரு அதிர்ச்சி! 2௦௦7-க்கும் 2௦16-க்கும் இடைப்பட்ட பத்தாண்டுகளில் இந்தச் சரிவு விகிதம் உச்சத்தை எட்டியிருக்கிறது. முதலிடத்தில் ஆந்திரா (1௦௦௦-த்திற்கு 168 குறைவு) இரண்டாமிடத்தில் கர்நாடகா (1௦8 குறைவு) மூன்றாமிடத்தில் தமிழ் நாடு (95 குறைவு).

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி, “மனிதகுல ஆண் / பெண் பிறப்பு விகிதம் சிறிதளவு ஆணினம் பக்கம் சாய்ந்ததாகவே இருக்கிறது. இயற்கையான பிறப்பு விகிதம் 105 என்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அதன் பொருள் ஒவ்வொரு 100 பெண் குழந்தைகளுக்கும் 105 ஆண் குழந்தைகள் பிறக்கிறார்கள் என்பதாகும்.

பிறப்பு விகிதத்தில் ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் விபத்து, வன்முறை, போர் போன்ற புறக்காரணிகளால் இள வயதில் இறக்கும் ஆண்களில் எண்ணிக்கையும் பெண்களைவிட அதிகமாக இருப்பதால் இயற்கையிலேயே ஒருவித சமநிலை ஏற்பட்டு விடுகிறது. இந்தச் சமநிலை விகிதம் அந்நாட்டின் மொத்த ஜனத்தொகை விகிதத்தில் பிரதிபலிக்க வேண்டும். அதாவது, மொத்த ஜனத்தொகையில் ஆண்-பெண் விகிதாசாரம் 105 ஆகவோ அல்லது அதற்கும் குறைவாகவோ இருக்க வேண்டும்.

எந்த ஒரு நாட்டில் இந்த விகிதாசாரம் 105-க்கும் மிக அதிகமாக இருக்கிறதென்றால், அதாவது பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகள் அதிகமாக இருக்கிறார்கள் என்றால், அந்தச் சமூகத்தின் குழந்தை பிறப்பு விகிதத்தில் மனிதத் தலையீடு இருப்பதாகவே பொருள். அதாவது, கருக்கலைப்பு, சிசுக்கொலை ஆகியவற்றின் மூலமாக பெண் குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கையை அச்சமூகம் மட்டுப்படுத்துகிறது என்று கருத வாய்ப்பு உண்டு.

இதே போன்றதொரு அறிக்கையை உலக வங்கியும் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கைப்படி இந்தியாவின் பிறப்பு விகிதம் 1962-ல் 106-ஆக இருந்தது. அதாவது இயற்கையான பிறப்பு விகிதமான 105-ஐ விட கொஞ்சம்தான் அதிகம். ஆனால் இந்த விகிதம் கிடுகிடுவென அதிகரித்து 2017-ல் 111 ஆனது. சீனாவிலும் இதே காலகட்டத்தில் 107 ஆக இருந்த பிறப்பு விகிதம் 115 ஆக அதிகரித்துள்ளது.

யூனிசெஃப் நிறுவனம் வெளியிட்ட கட்டுரை ஒன்றில் இந்தியப் பிறப்பு விகிதத்தில் ஏற்படும் இத்தகைய சரிவு, கவலைக்குரியது என்று தெரிவித்துள்ளது.

சர்வதேச நிறுவனங்கள் வெளியிட்டுள்ள இப் புள்ளிவிவரங்களை இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கைகளும் உறுதிப்படுத்துகின்றன.

உலகிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடுகளான சீனாவிலும் இந்தியாவிலும் தான் இத்தகைய சமநிலையற்ற விகிதாச்சார்ரம் நிலவுகிறது. இந்த இரண்டு நாடுகளுமே மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதற்காகக் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைத் தீவிரமாக அமுல் படுத்தியவை.

இந்த விகிதாச்சாரக் குறைவினால் என்ன பாதிப்பு ஏற்படும்?

திருமணமாகாத ஆண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மக்கள் தொகைப் பெருக்கத்தில் தேக்க நிலை ஏற்படும். ஆண் – பெண் விகிதாச்சாரம் மேலும் மோசமான நிலையை எட்டும். பாலியல் ரீதியிலான குற்றங்கள் அதிகரிக்கும்.

வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்திற்கு முந்தைய அரபுக்களிடையே பெண் குழந்தைகளை வெறுக்கும் தன்மை இருந்ததைத் தெரிந்துகொள்ளலாம். தன்னுடைய பெண் குழந்தையை உயிரோடு மண்ணில் புதைக்கக்கூட காட்டுமிராண்டிகளான அன்றைய அரபு மக்கள் தயங்கவில்லை. அப்படி இருந்தவர்களை இஸ்லாம் முற்றாகத் திருத்தி, பெண் மக்களைக் கொண்டாடுபவர்களாக மாற்றியது.

இன்றைய புள்ளிவிபரங்களைப் பார்த்தால் அன்றையை காட்டுமிராண்டி கலாச்சாரம் மீண்டும் திரும்புகிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது!

தொடர்புடைய சுட்டிகள்:
https://economictimes.indiatimes.com/blogs/et-editorials/worrying-sex-ratio-trends-among-states/
http://www.searo.who.int/entity/health_situation_trends/data/chi/sex-ratio/en/
https://data.worldbank.org/indicator/SP.POP.BRTH.MF
http://www.unicef.in/Story/1129/Declining-sex-ratios-a-matter-of-concern
http://www.census2011.co.in/sexratio.php

 நன்றி: சத்தியமார்க்கம்.காம்

Thursday, February 07, 2019

முன்மாதிரி வணிகர்!

பித்தோழர்களில் பெரும்பாலானோர் வணிகர்களாக இருந்தனர். குறிப்பாக மக்காவிலிருந்து புலம் பெயர்ந்து மதீனாவுக்கு வந்த முஹாஜிர் தோழர்கள். அதற்கு இரண்டு முக்கியமான காரணங்களைக் குறிப்பிடலாம். ஒன்று, மக்காவைச் சுற்றியுள்ள கரடுமுரடான நிலப்பரப்பு விவசாயம் செய்ய ஏற்றதாக இல்லை. இரண்டு, நபி இஸ்மாயில் (அலை) அவர்களின் காலத்திலிருந்தே வணிகக் கூட்டங்கள் தங்கிச் செல்லும் இடமாக இருந்த மக்கா பிற்காலத்தில் ஒரு முக்கிய வணிக மையமாகவும் ஆனது. மக்காவிலிருந்து புறப்பட்ட வணிகக் கூட்டங்கள் ஷாம், சிரியா, நஜ்ரான் போன்ற பிரதேசங்களுக்குச் சென்று வணிகம் செய்து பொருளீட்டித் திரும்பின. நபி (ஸல்) அவர்களே வணிகப் பெருமாட்டி கதீஜாப் பிராட்டியாரின் (ரலி) வணிகக் கூட்டத்தை வழி நடத்திச் சென்று பெரும் பொருளீட்டித் திரும்பியிருக்கிறார்கள் என்பது இஸ்லாத்தின் மீளெழுச்சிக்கு முந்தைய வரலாறு.

இதெல்லாம் இருந்தும் பிற்காலத்தில் நபித்தோழர்களில் வணிகர் என்றாலே முதலில் நினைவுக்கு வரும் பெயர் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி). எல்லா முஹாஜிர் தோழர்களைப் போலவே தம் செல்வங்களையெல்லாம் மக்காவிலேயே விட்டுவிட்டு வெறுங்கையுடன் ஓர் அகதியாக மதீனாவுக்கு வந்த அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களை மதீனாவாசியான ஸஅத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்களுக்கு, உடன் பிறவா சகோதரராக அறிவித்தார்கள் நபி (ஸல்).

பெருந்தன்மையான மனத்தின் சொந்தக்காரர் ஸஅத், தம் சொத்துகள் அனைத்திலும் சரிபாதியைத் தம் புதிய சகோதரருக்குப் பங்கிட்டுக் கொடுக்க முன் வந்தார். அவற்றை ஏற்க மறுத்த அப்துர் ரஹ்மான் (ரலி) “எனக்கு, சந்தையைக் காட்டுங்கள்” என்று சொன்ன தன்னம்பிக்கை வார்த்தைகள் நபித்தோழர்களின் வரலாற்றில் தனியிடம் பெற்றவை. வாழ்வாதாரம் அளிப்பவன் இறைவன் என்ற பேருண்மையின் வெளிப்பாடாய் அமைந்த வார்த்தைகள் அவை.

அவருடைய உழைப்புக்கேற்ற உயர்வை வழங்கினான் இறைவன். தாம் பெருஞ்செல்வப் பேறுகளைப் பெற்றுள்ளதைப் பற்றிப் பின்னொரு சமயத்தில் மக்களிடம் பேசும்போது அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) சொன்ன விளக்கங்களில் ஒன்று இறை நம்பிக்கையுள்ள வணிகர்களுக்கு சிறந்ததொரு பாடமாக உள்ளது. அவர் சொன்னார்:

நான் குறைந்த ஆதாயத்தை (லாபத்தை)க் கூட அலட்சியப்படுத்தியதில்லை.
என்னிடம் விலை கேட்கப்பட்ட எந்தப் பொருளையும் விற்பனை செய்வதில் வீணாகக் காலம் தாழ்த்தியதில்லை.
நான் தவணை முறையில் விலையைப் பெற்றுக்கொள்ளும் விதத்தில் விற்பனை செய்வதில்லை.
இந்த மூன்று காரணங்களையும்கூட நான் என் முன்னேற்றத்திற்கான அடிப்படைகளாகக் கருதுகிறேன்”

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களின் வாழ்க்கையைப் பற்றி ‘முன்மாதிரி வணிகர் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி)‘ என்ற தலைப்பில் ஏம்பல் தஜம்முல் முகம்மது அவர்களும் கே.தாஜுத்தீன் அவர்களும் இணைந்து ஒரு நூல் எழுதியிருக்கிறார்கள். இஸ்லாமிக் ஃபவுண்டேஷன் டிரஸ்ட் வெளியீடான இந்த நூல் அநேகமாக அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களை பற்றி இதுவரை தமிழில் வெளியான ஒரே நூலாக இருக்கும் என்று நினைக்கிறேன். படிப்பதற்கு ஆர்வத்தைத் தூண்டும் வகையில் எளிய மொழி நடையில் அத்தோழரின் முழு வாழ்க்கை வரலாறும் விவரித்துச் சொல்லப்பட்டிருக்கிறது.

நூல்: முன்மாதிரி வணிகர் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி)
நூலாசிரியர்கள்: ஏம்பல் தஜம்முல் முகம்மது / கே. தாஜுத்தீன்
பதிப்பகம்: இஸ்லாமிக் ஃபவுண்டேஷன் டிரஸ்ட்

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

Tuesday, January 22, 2019

அழைப்பு

Ubudiah Masjid, Perak, Malaysia
மாம் சாஹிப் மக்ரிப் தொழுகை முடிந்து வீட்டிற்கு வரும்போது அவருடைய கைபேசி ஒலித்தது. யாரோ புது எண், மலேஷியாவிலிருந்து அழைக்கிறார்கள்.

“அஸ்ஸலாமு அலைக்கும்”

‘வ அலைக்குமுஸ் ஸலாம் உஸ்தாத். நான் மலேஷியாவிலிருந்து யூனுஸ் பேசுறேன். என்னை ஞாபகம் இருக்கா?”

எந்த யூனுஸ்? என்று கேட்க எத்தனித்தபோதே அவருக்கு ஞாபகம் வந்து விட்டது. “அட..தம்பி யூனுஸ்.! எப்படி இருக்கீங்க?”

“நான் நல்லா இருக்கேன் உஸ்தாத். அல்ஹம்துலில்லாஹ். நீங்க எப்படி இருக்கீங்க?”

“நானும் நல்லா இருக்கேன், அல்ஹம்துலில்லாஹ்!”

“உஸ்தாத், நீங்க மலேஷியாவிலிருந்து போன பிறகு உங்களைத் தொடர்பு கொள்ளப் பல தடவை முயற்சி செய்தேன். உங்க நம்பர் கிடைக்கலை. சமீபத்துல உங்க நண்பர் இஸ்மாயிலைப் பார்த்தேன். அவர் கிட்டதான் உங்க நம்பர் வாங்கி பேசுறேன். இன்ஷாஅல்லாஹ் அடுத்த வாரம் நான் உம்ரா போக இருக்கேன். எனக்காக துஆ செய்யுங்க உஸ்தாத்.”
“மாஷா அல்லாஹ். கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. அல்லாஹ் உங்கள் பயணத்தை எளிதாக்கி உங்கள் உம்ராவை ஏற்று அருள் புரிவானாக”

“அல்ஹம்துலில்லாஹ். எனக்கு இந்த வாய்ப்பை அளித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். நீங்கள் எனக்குச் செய்த உதவியையும் நான் மறக்க மாட்டேன்.” நாத் தழுதழுக்கச் சொன்னார் யூனுஸ்.

oOo

ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது அது. அப்போது இமாம் சாஹிப் மலேஷியாவில் உள்ள ஒரு பள்ளிவாசலில் இமாமாக இருந்தார். மாலை வேளை அஸ்ருத் தொழுகை முடிந்ததும் காலாற நடப்பதும் அப்பகுதி மக்களிடம் அளவளாவுதலும் இமாம் சாஹிபின் வழக்கமாக இருந்தது. அன்று ஏனோ நடப்பதற்கு மனமில்லை. பள்ளி வாசலுக்கு அருகிலேயே ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். அப்போது பள்ளியைக் கடந்து சென்ற ஒரு வாலிபர் சற்றே தயங்கி நின்றார். அவரது ஆடையில், நெற்றியில், கழுத்தில் தொங்கிய மாலையில் அவரது மத நம்பிக்கையின் அடையாளங்கள் பளிச்சென்று தெரிந்தன. ஏதோ ஓர் எதிர்பார்ப்பு அவருடைய கண்களில் தெரிந்தது.

தயங்கி நின்ற அவரை “தம்பி.. உள்ளே வாங்க” என்று அழைத்தார் இமாம் சாஹிப். உள்ளே வந்தவர் இன்னும் தயங்கியவாறே “நானெல்லாம் இங்கே உள்ளே வரலாமா?” என்று கேட்டார். “தாராளமா வரலாம். தயக்கமே வேண்டாம். இப்படி உட்காருங்க.” என்று அருகிலிருந்த இருக்கையைச் சுட்டினார் இமாம்.

அந்த இருக்கையில் அமர்ந்த அந்த வாலிபர் சற்று உணர்ச்சி வசப்பட்டவராக இருந்தார். ஏதோ கேட்க விரும்பியதைப் போலத் தெரிந்தது. ஆனால் பேச நா எழவில்லை. திடீரென கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தோட தேம்பி அழ ஆரம்பித்தார் அவர்.

அவர் முதுகில் தடவிக் கொடுத்து ஆசுவாசப் படுத்திய இமாம், அவரே பேசட்டும் என்று காத்திருந்தார். கொஞ்ச நேரம் ஆனதும் தன் அழுகையைக் கட்டுப் படுத்திக் கொண்ட அந்த வாலிபர் சொன்னார், “நான் எத்தனையோ முறை இந்த மசூதியைக் கடந்து போயிருக்கேன். அப்பல்லாம் எனக்கு எதுவும் தோன்றியதில்லை. ஆனா இன்னிக்கு இந்த வாசலைத் தாண்டுரப்போ இது உள்ளே போகணும்னு தோணுச்சு. அதுக்கு ஏத்த மாதிரி நீங்களும் என்னை உள்ளே கூப்பிட்டீங்க. உள்ள வந்ததும் இனம் புரியாத ஒரு உணர்வு ஏற்பட்டுச்சு. ஒரு விதமான வைப்ரேஷன் அது. என்னைக் கட்டுப்படுத்திக்க முடியாம அழுகை வந்துச்சு” என்றவர் சற்று நிதானித்தவராக “நான் உங்களை ஒன்னு கேக்கலாமா?” என்றார்.

“தராளமா கேளுங்க தம்பி”

“நான் உங்க மதத்துல சேரனும். அதுக்கு நான் என்ன செய்யணும்?”

‘சட்’டென்று வந்த அந்தக் கேள்வியை எதிர்பார்க்காத இமாம் சற்றே திகைப்படைந்தார்.

“அது மிக எளிதானதுதான் தம்பி. நம்மைப் படைத்த இறைவன் அல்லாஹ் ஒருவனே என்பதும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறுதி இறைத்தூதர் என்பதும்தான் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை. இந்த இரண்டையும் மனதார நம்பி, வாயால் மொழிந்தாலே நீங்கள் முஸ்லிம் ஆகி விடுவீர்கள்.”
“அப்படின்னா எனக்கு இப்பவே அதைச் சொல்லித் தர முடியுமா?”

“இன்றிலிருந்து நீங்கள் ஒரு புது வாழ்வைத் துவங்கப் போகிறீர்கள். இந்தத் துவக்கம் உங்களுக்கு இனிதாக அமையட்டும். நன்றாக குளித்துச் சுத்தம் செய்து கொண்டு வாருங்கள்”

‘ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்தில் கேட்டு விட்டார், வீட்டிற்குப் போய் ஆற அமர யோசித்தார் என்றால் மனம் மாறவும் வாய்ப்பிருக்கிறது’ என்று இமாம் எண்ணிக் கொண்டார்.

ஆனால் சுமார் ஒரு மணி நேரம் கழித்து குளித்து, தூய்மையான ஆடை அணிந்தவராக அந்த வாலிபர் திரும்பி வந்து விட்டார். இமாம் சொல்லித்தந்த ஷஹாதத் கலிமா எனும் உறுதிமொழியை உளமார ஏற்று இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.

“உங்களுக்கு விருப்பமான இஸ்லாமியப் பெயர் எதுவும் இருக்கிறதா?” என்று அந்த வாலிபரிடம் கேட்டார் இமாம்.

“அப்படி எதுவும் இல்லை. உங்கள் பெயர் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா?”

“என் பெயர் யூனுஸ். இது இறைத்தூதர் ஒருவரின் பெயர்”

“அந்தப் பெயரையே எனக்கும் சூட்டி விடுங்கள்” என்று கேட்டுக் கொண்டார் அந்த வாலிபர்.

وَاللّٰهُ يَهْدِىْ مَنْ يَّشَآءُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏

இவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகின்றான்.” 2:213

அந்த அளவற்ற அருளாளனின் கருணையை நினைவு கூர்ந்தவராக தன் வீட்டை நோக்கி நடந்தார் இமாம் யூனுஸ்.

oOo

(இதுவொரு சிறுகதை அல்ல; உண்மை நிகழ்வொன்றின் சுருக்கம்)சத்தியமார்க்கம்.காம்   தளத்தில் வெளியானது

Monday, July 13, 2009

பொய்த்துப்போன முதலாளித்துவம்! (பகுதி-1)


2007-ல் அமெரிக்காவில் தொடங்கிய பொருளாதார நெருக்கடி, இன்று பல உலக நாடுகளின் பொருளாதாரத்தையே ஆட்டம் காண வைத்திருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் நூற்றுக்கணக்கான சிறு நிதி நிறுவனங்கள் மூடப்பட்டோ, நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டோ காணாமல் போய்விட்டன. அவற்றில் முதலீடு செய்தவர்களின் பணம் காற்றில் கரைந்து போனது. HSBC, Merrill Lynch, Citigroup, Lehman Brothers போன்ற பெரும் நிதி நிறுவனங்கள் மட்டுமின்றி AIG போன்ற காப்புறுதி நிறுவனங்கள்கூட பெருமளவில் பாதிப்படைந்தன.

இந்த அமெரிக்கப் பொருளாதார நெருக்கடி ஒரு தொற்றுநோயைப் போல உலகமெங்கும் பரவி, பல நாடுகளின் நிதி நிறுவனங்களைப் பாதித்தது. சிறியது பெரியது என்ற பாகுபாடுகளில்லாமல் சகட்டுமேனிக்கு நிதி நிறுவனங்கள் பாதிப்படைந்து, நிதிஉலகின் எதிர்காலமே சட்டென்று இருண்டு போனது. பாதிப்படைந்த நாட்டு அரசாங்கங்கள், மாற்று வழிகளைக் கண்டுபிடிக்கும்படி தங்கள் நாட்டுப் பொருளியல் நிபுணர்களை பணித்தன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற நாடுகளில், சாவின் விளிம்பை எட்டிப் பார்க்கும் தங்கள் நாட்டு நிதி நிறுவனங்களைத் தூக்கி நிறுத்த அரசாங்கங்கள் பெரும் தொகையைச் செலவு செய்து கொண்டிருக்கின்றன.

ஆனால் மக்களோ இதுநாள்வரை இந்த நாடுகளின் பொருளியலின் இயங்கு சக்தியாக இருந்த முதலாளித்துவக் கொள்கையின் மீது நம்பிக்கை இழந்து விட்டனர். "முதலாளித்துவம் பொய்த்து விட்டது!" என்ற கோஷம் மேற்கத்திய நாடுகளிலிருந்தே உரக்க ஒலிக்கிறது. முதலாளித்துவக் கொள்கைகள் வீழ்ச்சியடைந்ததற்கான காரணங்களையும் மாற்று வழிகளைப் பற்றியும் பொருளியல் நிபுணர்கள் ஆராயத் தொடங்கியுள்ளனர்.

இத்தனைப் பிரச்னைகளுக்கும் முதல் காரணம் அமெரிக்காவில் ஏற்பட்ட ‘subprime நெருக்கடி’ எனப்படும் திரும்பச் செலுத்தப் படாத வீட்டுக் கடன்கள்தான் என்கிறார்கள். அமெரிக்காவில் ஏற்பட்ட இந்தக் கடன் பிரச்னை உலகமெங்கும் பரவியது எப்படி? அதைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், இந்தப் பிரச்னை எப்படித் தோன்றியது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அமெரிக்கப் பொருளாதார நடவடிக்கைகளில் பெரும்பகுதி கடன் அடிப்படையில் நடத்தப் படுகின்றன. ஒவ்வொரு சராசரி அமெரிக்கரும் தனது வருமானத்தில் கால் பங்கை கிரெடிட் கார்டு கடன்களை அடைக்கப் பயன்படுத்துகின்றனர். வீட்டுக் கடன், வாகனக் கடன் போன்ற பெரிய கடன்களை அடைக்க இன்னொரு கால்பங்கு வருமானம் தேவைப்படும். கடன் வாங்குவதில் தேக்கநிலை ஏற்படும்போதெல்லாம் கடன்களுக்கான வட்டி விகிதத்தை அரசாங்கம் குறைத்து, மக்களை மேலும் கடன் வாங்கத் தூண்டும். அதாவது கடனிலிருந்து மக்களை மீளவிடாமல் பார்த்துக் கொள்ளும்.

1990-களின் ஆரம்பத்தில் உழைப்பாளர் மற்றும் நடுத்தர வருமானம் உடைய மக்களை இலக்காக வைத்து மிகக் குறைந்த வட்டிக்கு வீட்டு அடமானக் கடன்கள் வாரி வாரி வழங்கப் பட்டன. "குறைந்த வட்டியில் சொந்தமாக வீடு" என்று ஆசை காட்டப் பட்டு, பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினர் கடனாளிகளாக்கப் பட்டனர்.

கொஞ்ச நஞ்சம் தயக்கம் காட்டியவர்களைக் கூட, "நீங்கள் வாங்கப் போகும் வீட்டின் மதிப்பு 10 வருடங்களில் பல மடங்கு உயர்ந்து விடும். ஒருவேளை உங்களுக்குக் கடனை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டால்கூட அந்த வீட்டை விற்று, கடனையும் அடைத்து மேற்கொண்டு நீங்கள் லாபமும் பார்க்கலாம்" என்று ஆசை காட்டிக் கடன் வாங்க வைத்தார்கள். ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் இந்தப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டன. வீடுகள் விற்க விற்க அவர்களுக்கும் லாபம்தானே!

குறைந்த பட்ச மாத வருமானம் உடைய ஒருவர் 5 லட்சம் டாலர் மதிப்புள்ள ஒரு வீட்டை வாங்க விரும்பினாலும், அவர் 5 லட்சத்தையும் வங்கியிலிருந்து கடனாகப் பெற்று, விரும்பும் வீட்டை வாங்கி விட முடியும். மாதாமாதம் அவர் 1000 டாலர் திரும்பச் செலுத்தினாலும் முழுக் கடனையும் வட்டியுடன் அடைத்து முடிக்க 60-70 வருடங்களாகி விடும்.

'இதெல்லாம் எளிதில் திரும்பி வராதக் கடன்கள்' என்று கடன் கொடுத்த நிதி நிறுவனங்களுக்குத் தெரியாதா என்ன? இதைச் சமாளிக்க அவர்கள் ஒரு வழியைக் கண்டுபிடித்தனர். இந்தக் கடன்களையெல்லாம் 'கடன் பத்திரங்களாக' மாற்றி உலகச் சந்தையில் விற்று விட்டார்கள். இவ்வாறு விற்கப் பட்ட கடன்களின் மதிப்பு 11.8 டிரில்லியன் டாலர்கள் என்ற கணக்கு இப்போது வெளியாகி இருக்கிறது (ஒரு டிரில்லியன் என்பது, இலட்சம் கோடி). அமெரிக்க ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்வதாகப் பெருமையுடன் நினைத்துக் கொண்டு, பல நாட்டு நிதி நிறுவனங்களும் இந்தக் கடன் பத்திரங்களை வாங்கின.

ஆரம்பத்தில், புதிதாகத் தொடங்கப்பட்ட நம்மூர் ஹோட்டல்களைப்போல் எல்லாம் சுவையாக இருந்தது. வீட்டு விலைகள் ஏறிக் கொண்டே இருந்தன. அதற்கேற்றாற்போல் மக்களின் கடன் சுமையும் அதிகரித்துக் கொண்டிருந்தது. பெரும் தொகையைக் கடனாகப் பெற்று வீடு வாங்கிய மாதச் சம்பளக்காரர்கள் நாளாக ஆக கடன் தவணை கட்ட சிரமப்பட ஆரம்பித்தார்கள். வாடகை வீட்டிற்கு 1000 டாலர் கட்டிக் கொண்டிருந்தவர்கள், சொந்த வீட்டிற்கு 3000 டாலர் கட்ட வேண்டியிருந்தது. தவணைகள் தவறத் தொடங்கின. அமெரிக்காவில் வேலையின்மையும் அதிகரித்துக் கொண்டிருந்தது.

கடன் வாங்கி வீடு வாங்கியவர்களின் பெரும் நம்பிக்கை, 'வீட்டு விலை உயர்ந்து கொண்டே போகும்' என்பதுதான். அந்த நம்பிக்கையில் இடி விழுந்தது! சூட்சுமம் அவிழத் தொடங்கியது! வீட்டு விலைகள் எதிர்பாரா விதமாக சரியத் தொடங்கின. அதாலபாதாளச் சரிவு என்றுகூடச் சொல்லலாம். 5 லட்சத்திற்கு வாங்கிய வீட்டின் மதிப்பு 1 லட்சத்துக்குக் கீழிறங்கி விட்டது. இப்போது கடன் வாங்கியவர்கள் வீட்டை விற்றாலும், வங்கியிடமே திருப்பிக் கொடுத்தாலும், கடன் வாங்கிய 5 லட்சத்தைத் திருப்பிச் செலுத்தியே ஆக வேண்டும்.

வீட்டு விலைகள் ஏறியதே இயல்பானதல்ல. நிதி நிறுவனங்கள், காப்புறுதி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மற்றும் வீடுகளின் சந்தை விலையை மதிப்பிடும் நிறுவனங்கள் கூட்டணி அமைத்து நடத்திய கூட்டுக் கொள்ளை. இவர்கள் ஒன்று சேர்ந்து வீட்டு விலைகளை இருமடங்கு, மும்மடங்கு என ஏற்றி விட்டார்கள். போதாக்குறைக்கு வீடு வாங்கச் செலவு செய்யும் பணத்திற்கு வரி விலக்கு அளித்து ரியல் எஸ்டேட் சந்தையை மேலும் ஊக்கப் படுத்தி, மக்களை நிரந்தரக் கடன்காரர்களாக ஆக்கியது அரசு.

மாத வருமானக் காரர்களால் கடன் தவணைகளைத் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. வீடுகளை வங்கியிடமே ஒப்படைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறினார்கள். ஆளில்லா வீடுகளின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்தது. புது வீடுகளின் கட்டுமானப்பணிகள் அப்படியப்படியே நிறுத்தப் பட்டன. மக்களிடம் பணப்புழக்கம் வெகுவாக குறைந்தது. கடன் கொடுத்த வங்கிகளுக்கு இரண்டு பக்கம் இடி. கொடுத்த கடன் திரும்பவில்லை. அந்த வங்கியில் பணம் டெபாசிட் செய்திருந்தவர்கள் தங்கள் பணத்தை திரும்ப எடுத்துக் கொள்ள விரைந்தனர். இதன் விளைவாகப் பல வங்கிகள் திவாலாயின.

வங்கிக் கடனை நம்பியே தொழில் நடத்திக் கொண்டிருந்த பல வணிக நிறுவனங்கள் சிக்கலில் விழுந்தன. அவர்களுக்கு வேண்டிய அளவிற்குக் கடன் பெற முடியவில்லை. கிடைக்கும் கொஞ்சக் கடன் தொகைக்கும் அதிகமான வட்டி கொடுக்க வேண்டியிருந்தது. தொழில் முதலீடுகள் சுருங்கின. வேலையிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்தது. பங்குச் சந்தைகள் சரிந்தன. நாட்டின் முழுப் பொருளாதாரமும் ஸ்தம்பித்தது.

அமெரிக்க நிதி நிறுவனங்கள் அடமானக் கடன்களை, 'கடன் பத்திரங்களாக' மாற்றி உலகச் சந்தையில் விற்றுவிட்டதை முன்னர் பார்த்தோம். அக்கடன் பத்திரங்களில் முதலீடு செய்திருந்த, அக்கடன்களைக் காப்பீடு செய்திருந்த பல வெளிநாட்டு நிதி நிறுவனங்களும் பெரும் நட்டமடைந்தன. அமெரிக்கா என்ற தனியொரு நாட்டின் கடன் பிரச்னை, முழுஉலக நிதிச் சந்தையின் பிரச்னையாக மாறியது இப்படித்தான்.

ஆனால், இத்தனைப் பிரச்னைகளுக்கும் ஒரே காரணம் ‘Subprime நெருக்கடி’தான் என்றால் அது முழுஉண்மையல்ல. மயிலிறகேயானாலும் வண்டியின் தாங்கும் சக்திக்கு மேலாக ஏற்றிக் கொண்டேயிருந்தால் ஒரு சந்தர்ப்பத்தில் வண்டியின் அச்சு முறிந்து போகும் (பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின் - குறள்). கடைசியாக ஏற்றப்பட்ட இறகுதான் அச்சை முறித்தது என்று சொல்ல முடியாது. அதுபோல Subprime நெருக்கடியைக் கடைசியாக வைக்கப் பட்ட இறகு என்று வேண்டுமானால் சொல்லலாம். அப்படியானால் இந்தப் பொருளாதாரப் பிரச்னையின் அடிப்படைக் காரணம் என்ன?

"எந்த ஆதாரமும் இல்லாமல் இன்றைய மத்திய வங்கிகள் அச்சடிக்கும் பணத்திற்கும் திருட்டுத்தனமாக அச்சடிக்கப்படும் கள்ள நோட்டிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இதைச் சொல்வதற்கு எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை"

பொருளியலில் நோபல் பரிசு பெற்ற மாரிஸ் அலைஸ், "உலகப் பொருளாதாரம் எந்தக் கொள்கைகள், சட்டதிட்டதிட்டங்களின் அடிப்படையில் அமைக்கப் பட்டிருக்கிறதோ, அவை குறைபாடுடையவை. விரைவிலேயே அவை சரிசெய்யப்படவில்லை என்றால், உலகப் பொருளாதார வீழ்ச்சிக்கு அவையே காரணமாகி விடும்" என எச்சரிக்கைச் செய்திருக்கிறார். "எந்த ஆதாரமும் இல்லாமல் இன்றைய மத்திய வங்கிகள் அச்சடிக்கும் பணத்திற்கும் திருட்டுத்தனமாக அச்சடிக்கப்படும் கள்ள நோட்டிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இதைச் சொல்வதற்கு எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை" என்றும் சொன்னவர் மாரிஸ் அலைஸ்.

இந்தப் பொருளியல் நிபுணரின் கூற்றுப்படி, உலகப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த வேண்டுமென்றால், இன்றைய நடைமுறைப் பொருளியலின் அடிப்படையிலிருந்து மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு மாற்றங்கள் செய்யப்பட்டு, சீர்திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டால், உலகப் பொருளாதாரத்தின் இயங்குதளமாக இருப்பது இஸ்லாமியப் பொருளியலாக இருக்கும்.

- தொடரும், இன்ஷா அல்லாஹ்


நன்றி: சத்தியமார்க்கம்.காம்

Sunday, April 12, 2009

மொகலாயர்கள் இஸ்லாமை பரப்பினார்களா?

"பிரிட்டீஷ்காரன் இந்தியாவுக்குள் நுழைய வில்லை என்றால், இந்துமத இந்தியா இஸ்லாமிய கஜினிஸ்தானாக மாறி இந்துக்கள் அனைவரும் மொட்டை அடித்துத் தொப்பியுடன் முஸ்லீமாக இருந்திருப்பார்கள்" என நண்பர் ஜெயபாரதன் ஒரு பதிவில் பின்னூட்டமிட்டிருந்ததை பார்க்க நேரிட்டது. முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்பையும், இந்தியாவில் இஸ்லாம் பரவியதையும் தொடர்புபடுத்தி வரலாறுகள் புனையப்பட்டதன் விளைவு இது.

முஸ்லிம் மன்னர்கள் இஸ்லாமை பரப்புவதற்காக இந்தியாவிற்கு வரவில்லை. அன்றைய எல்லா ஆட்சியாளர்களைப் போலவும், தங்கள் ஆட்சிப் பரப்பை விரிவுபடுத்துவதே முஸ்லிம் மன்னர்களின் குறிக்கோளாகவும் இருந்தது.

கோவில்கள் அங்கு சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் கருவூலங்களை கைப்பற்றுவதற்காக தாக்குதலுக்கு ஆளாகியிருக்கின்றன. தாக்குதலை நடத்தியது ராஜேந்திர சோழன் என்றாலும் கஜினி முகமது என்றாலும் நோக்கம் கருவூலங்களை கைப்பற்றுவதுதான். ஆனால் கஜினி முகமதுவின் தாக்குதல் மட்டுமே அவரது மதத்துடன் இணைக்கப்பட்டு வரலாற்றுப் புத்தகங்களில் முன்னிறுத்தப் படுவதை நாம் காண முடிகிறது.

படையெடுப்பு என்ற பெயரில் கொடூரமான, அநாகரிகமான செயல்களை மேற்கொள்வோர் மதங்கடந்து நிற்பவர்கள் என்பதுதான் உண்மை.

ஆதிக்கத்தை நிலைநாட்டவும் பொருளைக் கவரவும் மன்னர்கள் நிகழ்த்தும் போர்களில் அறநெறிகள் பார்க்கப்படுவதில்லை என்பதே வரலாற்று உண்மை.

கஜினி முகம்மது, கோரி முகம்மது ஆகியோரின் படையெடுப்பை இஸ்லாமியப் படையெடுப்பு என்று கருதுவதும், அப்படையெடுப்பாளர்களின் வாரிசாக இன்றைய இஸ்லாமியர்களை நோக்குவதும், மிகவும் தவறானது.

மேற்கண்ட கருத்துக்களை அரிய ஆதாரங்களுடன் தனது "இஸ்லாமியப் படையெடுப்பும் இந்துப் படையெடுப்பும்" என்ற கட்டுரையில் விவரிக்கிறார் வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன். அவரது ஆக்கத்த்தை கீழே தருகிறேன்.

===========

இஸ்லாமியப் படையெடுப்பும் இந்துப் படையெடுப்பும்
- ஆ. சிவசுப்பிரமணியன்

நாடாளும் மன்னனுக்குத் தேவையான ஆறு உறுப்புக்களுள் முதலாவதாகப் படையைக் குறிப்பிடுவார் வள்ளுவர். பிற்காலச் சோழர் காலத்தைச் சார்ந்த சீவகசிந்தாமணிக் காப்பியம் படையினால் விளையும் நன்மைகளைப் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

பொன்னின் ஆகும் பொருபடை யப்படை
தன்னில் ஆகுந் தரணி தரணியிற்
பின்னை யாம் பெரும்பொருள் அப்பொருள்
துன்னுங் காலைத் துன்னாதன இல்லையே (செய்யுள்: 1923)

பொன் இருந்தால் போரிடும் படையைத் திரட்டலாம். படை இருந்தால் ஆட்சி கிடைக்கும். ஆட்சி கிடைத்தால் கிடைக்காதன என்று எவையும் இல்லை என்பது இச்செய்யுளின் பொருளாகும். ஆட்சிப் பரப்பை விரிவுபடுத்துவதே மன்னர்களின் குறிக்கோள். இதனால்தான் இடைக்குன்றூர்க்கிழார் என்ற கவிஞர்,

"ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
புதுவதன்று இவ்வுலகத்து இயற்கை (புறம் 76: 12)

என்று பாடியுள்ளார். இவ்வாறு போர் என்பது மன்னர்களுக்கிடையில் மிக இயல்பாக நடைபெறும் நிகழ்வாக இருந்தது. ஆயினும், மன்னர்கள் அவர்களது படைவீரர்கள் ஆகியோருடன் இது நின்று விடவில்லை. குடிமக்களையும் பாதிக்கும் ஒன்றாகவே போர் அமைந்தது. இதைச் சங்க நூல்கள் சுட்டுகின்றன.

பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியின் வீரச்செயல் நெட்டிமையார் என்ற புலவரால் இவ்வாறு புகழப்படுகிறது,

"பகைவர் நாட்டில் தேர் செல்லும் தெருக்களைக் கழுதை பூட்டிய ஏரால் உழுது பாழ்படுத்தினாய். பறவைகள் ஒலிக்கும் புகழமைந்த வயல்களில் குதிரைகள் பூட்டிய தேரைச் செலுத்தி விளைபயிர்களை அழித்தாய்". (புறநானூறு 15). இதே மன்னனைக் காரிகிழார் என்ற புலவர் வாழ்த்தும் பொழுது,

"வாடுக இறைவநின் கண்ணி யொன்னார்
நாடுசுடு கமழ்புகை யெறித்த லானே" (புறம் 6)

என்று வாழ்த்துகிறார். பகைவருடைய நாட்டினைச் சுட்டெரிப்பதால் எழும் புகையால் உன் தலைமலை வாடட்டும் என்பது இதன் பொருளாகும்.

சோழன் கரிகால் பெருவளத்தான் பகலும் இரவும் கருதாது பகைவரது ஊரைத் தீயிட்டு அந்த ஒளியில் பகைவர்களின் புலம்பலோசையுடன் கொள்ளையிடுதலை விரும்புபவன் என்பதனை,

"எல்லையும் இரவும் எண்ணாய் பகைவர்
ஊர் சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலைக்
கொள்ளை மேவலை யாகலின்"

என்ற புறநானூற்றுப் பாடலால் (7) அறிகிறோம். சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி பகைவரது நெல் விளையும் வயல்களைக் கொள்ளையடித்து வீடுகளைக் கொளுத்திய செயல் போற்றப்படுகின்றது.

பகைவர் நாட்டை எரிக்கும் இக்கொடுஞ்செயல் அடிக்கடி நிகழ்ந்தமையால்தான் சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, வற்றிய பாலை நிலத்திற்கு "செருமிகு சினவேந்தன் சிவந்திறுத்த புலம்போல" என்ற உவமையைப் பயன்படுத்துகிறார்.

பகைவர் நாட்டைத் தீயிட்டு அழிக்கும் கொடுமை மட்டுமல்லாது போரில் தோற்றவர்களைக் கொடூரமாகப் பழிவாங்கும் செயல்களும் நிகழ்ந்துள்ளன.

நன்னன் என்ற குறுநில மன்னன் தன்னுடைய பகைவர்களை வென்ற பிறகு அவர்களின் உரிமை மகளிரின் தலையை மழித்து அக்கூந்தலைக் கயிறாகத் திரித்து, அக்கயிற்றால் அப்பகைவரின் யானையைப் பிணித்தான் (நற்றிணை 270).

வேல்கெழு குட்டுவன் என்ற சேர மன்னன் பழையன் என்ற மன்னனை வென்று அவன் மனைவியாரின் கூந்தலைக் கொண்டு திரிக்கப் பெற்ற கயிற்றினால் யானைகளை வண்டியில் பூட்டி அவ்வண்டியில் வெட்டப்பட்ட பழையனது காவல் மரத்தை ஏற்றிச் சென்றான் (பதிற்றுப் பத்து 5ம் பத்து)

கணைக்கால் இரும்பொறை என்ற சேர மன்னன் மூவன் என்பவனைப் போரில் வென்று அவனது பற்களையெல்லாம் பிடுங்கித் தொண்டி நகர் கோட்டைக் கதவில் பதித்தான்.

மத்தி என்ற பரதவர் தலைவன் எழினி என்ற குறுநில மன்னனின் பற்களைப் பிடுங்கி தனது வெண்மணிக் கோட்டைக் கதவில் பதித்து வைத்தான். (அகம் 211).

இத்தகையக் கொடுமைகள் தமிழ் மன்னர்களுக்கிடையில் நிகழ்ந்துள்ளன என்பதனையும் தமிழ் மக்களின் சொத்துக்களே அழிவுக்கு ஆளாயின என்பதனையும் நினைவிருத்திக் கொள்ளுவது அவசியம். எல்லாவற்றிற்கும் மேலாகத் தனி மனிதர்களின் நாடு விரிவாக்கும் கொள்கையால் தமிழ்ச் சமுதாயம் அவலத்திற்காளானது.

இவையெல்லாம் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு நடந்த கொடுமைகள் என்றால் பதினொன்றாவது நூற்றாண்டில் படையெடுப்பின்போது நிகழ்ந்த கொடுமைகள் இவற்றை விஞ்சுவதாகவே உள்ளன.

ராஜ ராஜ சோழனின் மெய் கீர்த்திகளில் அவனது வெற்றிச் சிறப்புகளில் ஒன்றாக "இரட்டைபாடியும், ஏழரை இலக்கமும் வென்று" என்ற தொடர் இடம்பெறுகிறது. ராஜ ராஜன் தன் மகன் முதலாம் இராசேந்திரனை அனுப்பி இவ்வெற்றியைப் பெற்றான். முதலாம் இராசேந்திரன் தலைமையில் சென்ற சோழர் படை சத்யாசிரையன் என்ற மேலைச் சளுக்கர் மன்னனுடன் போரிட்டு வென்று இரட்டைபாடியைக் கைப்பற்றியது இப்போரில் இராசேந்திரன் மேற்கொண்ட பழி செயல்களை சத்தியாசிரையனின் கி.பி. ஆயிரத்தி ஏழாம் ஆண்டு காலத்திய கல்வெட்டு பின்வருமாறு குறிப்பிடுகிறது. (சாஸ்திரி 1989: 23940).

நாட்டை சூறையாடி பாழ்படுத்தினான். நகரங்களைக் கொளுத்தினான். இளங்குழவிகள் அந்தணர் என்றும் பாராமல் அவர்களைக் கொன்றும் கன்னியரைக் கைப்பற்றி மனைவியராக்கினான். அந்தணச் சாதியை அழித்தும் அளவற்ற பொருள்களைக் கவர்ந்து கொண்டும் தன் நாட்டிற்குத் திரும்பினான்.

இவ்வாறு சூறையாடி வந்த செல்வத்தின் ஒரு பகுதியைத் தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கு வழங்கினான். சத்தியாசிரயனின் கல்வெட்டுச் செய்தி குறித்து தமிழ்நாட்டின் இரு பெரும் வரலாற்றுப் பேராசிரியர்கள் பின்வருமாறு கருத்துத் தெரிவித்துள்ளனர்.

(இண்) பகைவனின் கல்வெட்டில் காணப்படும் பெரும் நாச வேலைகளையும் கற்பழிப்புகளையும் சோழ இளவரசன் ராஜேந்திரன் செய்திருக்கக் கூடுமா? என்ற வினா எழுந்தாலும் . . . (நீலகண்ட சாஸ்திரி 1989: 240).

(இண்) பகையரசன் நாட்டிய கல்வெட்டாகையால் இது கூறும் செய்திகளை உண்மையென்று நம்பலாகாது. நீதியிலும், நேர்மையிலும் சிவத்தொண்டிலும் மேம்பட்டிருந்த சோழ மன்னனின் படைகள் இத்தகையக் கொடுமைகளை மக்களுக்கு இழைத்திருக்க முடியாது. (கே.கே. பிள்ளை 1981: 272)

இராஜேந்திரன் இத்தகைய செயல்களைச் செய்திருக்கக்கூடுமா? என்று சாஸ்திரியார் ஐயப்பட, கே.கே. பிள்ளையோ அப்படிச் செய்திருக்க முடியாது என்று சான்றிதழ் வழங்கிவிடுகிறார்.

இராஜேந்திரனின் கரந்தைச் செப்பேட்டின் மெய்கீர்த்திப் பகுதி " . . . யானைகள், குதிரைகள், ரத்தினங்கள், பெண்கள், குடைத் தொகுதிகள்" ஆகியனவற்றை சத்தியாசிரயனிடமிருந்து ராஜராஜன் பறித்துக் கொண்டதாகக் குறிப்பிடுகிறது (தந்தையாகிய இராஜராஜனால் அனுப்பப்பட்டமையால் இராஜேந்திரனின் வெற்றிச் சிறப்பு இராஜ இராஜனின் வெற்றிச் சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது).

இராஜேந்திரன் பட்டத்திற்கு வந்த பிறகு (1012-1044) நிகழ்த்திய போர்களில் அவன் செயல்பாடு எத்தகையது? என்பதைக் கண்டால் மேற்கூறிய கல்வெட்டுச் செய்திகள் உண்மையா? பொய்யா? என்பது புலனாகும். கி.பி. 1017-18இல் இவன் நடத்திய ஈழப் போரில் ஈழ மன்னனை இவன் வெற்றி கண்டு கைப்பற்றிய பொருள் குறித்து இவன் வெளியிட்ட கரந்தைச் செப்பேடு (செய்யுள் 58-59) பின்வருமாறு குறிப்பிடுகிறது.

"அவனுடைய நாட்டையும், அவனுடைய முடியையும், அவனுடைய அரச பத்தினியையும், அவளுடைய முடியையும், அவனுடைய மகளையும், மற்றப் பொருட் குவியல்களையும் . . . கைப்பற்றினான். "

சிங்கள நூலான மகாவம்சம் சிங்கள மன்னன் காட்டுக்குள் ஓடிப்போனதாகவும், உடன்பாடு செய்து கொள்ளுவதாகச் சொல்லிய சோழப்படை அவனை உயிரோடு பிடித்துக் கொண்டு, மேற்கொண்ட செயல்களை பின்வருமாறு குறிப்பிடுகிறது.

"தாங்கள் பிடித்த அரசனையும் தங்கள் கைக்குள் சிக்கிய கருவூலங்களையும் உடனே சோழ மன்னனுக்கு அனுப்பி வைத்தனர். பாதுகாப்பாக பல இடங்களில் இலங்கை முழுவதும் வைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்ன அறைகளை உடைத்து அவற்றிலிருந்த பொன்னாலான உருவங்களை அவர்கள் எடுத்துச் சென்றனர். அவர்கள் கண்பட்ட இடங்களிலெல்லாம் பெளத்த சமயத்து மடங்களை அழித்து இரத்தத்தை உறிஞ்சும் அரக்கர்களைப் போல் இலங்கையின் செல்வங்கள் அனைத்தையும் கொள்ளையடித்தனர்" (சாஸ்திரி, 1989: 272).

வங்காள தேசத்து மன்னன் மகிபாலனை வென்று யானைகள், பெண்கள், செல்லம் எல்லாவற்றையும் கைப்பற்றிக் கொண்டான் (மேலது: 281).

முதல் இராஜேந்திரனின் மூத்த மகனான ராஜாதிராஜன் (1018- 1054) இலங்கையின் மீது படையெடுத்து, வீரசாலமேகன் என்ற சிங்கள மன்னனை வென்றான். சிங்கள மன்னன் ஓடி ஒளிய அவனது தமக்கையையும், மனைவியையும் சிறை பிடித்ததுடன் அவனது தாயின் மூக்கை அறுத்தான் (ளு11 111; 5056).

ராஜாதிராஜன் சாளுக்கியர்களுடன் 1048இல் நிகழ்த்திய போரில் கிருஷ்ணா ஆற்றங்கரையில் உள்ள பூண்டூர் என்ற ஊரில் குறுநில மன்னர்களுடன் எண்ணற்ற பெண்களும் சிறைபிடிக்கப்பட்டனர். பூண்டூர் நகர் அழித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. கழுதைகள் பூட்டிய ஏரால் உழுது வரகு விதைக்கப்பட்டது. மாளிகை தீக்கிரையாக்கப்பட்டது. சோழர் கல்வெட்டுக்கள் கூறும் இச்செய்திகள் மிகைப்படுத்தப்பட்டன என்று கூறும் சாஸ்திரியார் (1989; 346), இத்தகைய செயல்கள் சோழர் காலக் கல்வெட்டுக்களில் பரவலாக இடம்பெற்றுள்ளன என்பதை மறந்துவிடுகிறார்.

1894ம் ஆண்டுக்கான கல்வெட்டு ஆண்டறிக்கையில் (எண். 172) ஆகவமல்லன் அனுப்பிய தூதுவர்கள் இருவரில் ஒருவனுக்கு ஐங்குடுமி வைத்து ஆகவல்லமன் என்று பெயரிட்டும் மற்றொரு தூதுவனுக்கு பெண்களுக்கு உரிய ஆடையை உடுக்க வைத்து ஆகமவல்லி என்று பெயரிட்டும் ராஜராஜன் அனுப்பியதாக குறிப்பிடுகிறது. (சாஸ்திரி 1989: 347).

சாளுக்கியர்களின் பழமையான நகரான கல்யாணபுரத்தைக் கைப்பற்றி அதை இடித்துத் தரைமட்டமாக்கி அங்கிருந்த ஒரு தூவாரபாலகர் உருவத்தைக் கொண்டு வந்தான். தஞ்சை மாவட்டம் தாராசுரம் கோவில் இடம்பெற்ற அப்படிமத்தின் பீடத்தில் "ஸ்ரீ விஜய ராஜேந்திரத் தேவர் கல்யாணபுரம் எரித்து கொண்டு வந்த துவார பாலர்" என்று குறிக்கப்பட்டுள்ளது. முதல் குலோத்துங்கச் சோழன் (1070---1120) இரண்டாம் கலிங்கப் போரில் (கி.பி. 1110) வென்று குதிரைகள், யானைகள், ஒட்டகங்கள் மற்றும் செல்வங்களுடன் மகளிரையும் கைப்பற்றி வந்தான். மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி. 1178- 1218) மதுரையின் மீது படையெடுத்து வென்ற பின்னர் அவன் செய்த செயல்களாக அவனது மெய்கீர்த்திகள் பின்வருபவனற்றைக் குறிப்பிடுகின்றன.

1. பெண்கள் அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டனர்.
2. தோற்றவர்களின் மூக்கு அறுக்கப்பட்டது.
3. பாண்டியனின் கூட மண்டபத்தை (முடி சூட்டும் மண்டபம்) இடித்து கழுதை ஏரைப் பூட்டி உழுதனர்.

திருவாரூர்த் தலைவனாக இருந்த கங்கை கொண்டான் உத்தம சோழராயனின் படையதிகாரியான கூத்தன் கணபதி என்பவனை "பகைவர்களின் மனைவியர்க்குக் கணவன்" என்று ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது (ARE 1913 ப. 97).

கி.பி. 1219இல் சோழ நாட்டின் மீது படையெடுத்த முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1216 -1238) தனது வீரச்செயல்களை, செய்யுள் வடிவிலான மெய்கீர்த்தியாக கல்வெட்டில் பொறித்துள்ளான் (I.P.S; 290, 323) புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான் மலையில் உள்ள அக்கல்வெட்டின் உரைநடை வடிவம் வருமாறு:

கொடுங் கோபமுடைய குதிரைகளையும், யானைகளையும் செலுத்திச் சென்று சோழர்களின் தஞ்சை நகரையும் செந்தழலிட்டுக் கொளுத்தினான்.

அழகிய குவளை மலர்களும், நீல மலர்களும் தம் அழகை இழக்கும்படி குளங்களையும் ஆறுகளையும் கலக்கினான்.கூடம், மதில், கோபுரம், ஆடல் நிகழும் அரங்கங்கள், மாட மாளிகைகள், கருவூலங்கள் ஆகியனவற்றை இடித்துத் தள்ளினான்.தன்னை வந்து அடிபணியாத பகை மன்னர்களின் மனைவியர்கள் அழுத கண்ணீர் ஆறாக ஓடும்படிச் செய்தான்.

பகைவரது நிலத்தை, கழுதை பூட்டிய ஏர் கொண்டு உழுது வெள்வரகை விதைத்தான். சோழர் தலைநகராக விளங்கிய முடிகொண்ட சோழபுரம் சென்று "விஜயாபிஷேகம்" எனனும் சடங்கை இவன் செய்தான். அதன் பொருட்டு சோழ அரசியும், அந்தப்புரத்துப் பெண்களும் தண்ணீர்க்குடம் முதலிய மங்கலப் பொருள்களை சுமந்து வரும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர் (சாஸ்திரி, மேலது, 579).

பல்லவ மரபைச் சேர்ந்த கோப்பொருஞ்சிங்கன் என்பவன் வைதீக சமயத்தைச் சேர்ந்தவன். சிறந்த சிவ பக்தன். சிதம்பரம் நடராசர் மீது பெரும்பற்று உடையவன் என்று இவனது வரலாற்றை எழுதிய எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் (1965: 117) குறிப்பிடுகிறார்.

சைவர்களின் முக்கிய புண்ணியத் தலங்களுள் ஒன்றான சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலில் தெற்குக் கோபுரம் கட்ட தானம் செய்துள்ளான். இதனால் இவனது பட்டப் பெயர் ஒன்றின் பெயரால் "சொக்கசீயன் திருநிலை எழுகோபுரம்" என்று இக்கோபுரம் அழைக்கப்பட்டது. சிதம்பரத்தின் கீழைக் கோபுரத்தை எழுநிலைக் கோபுரமாக உயர்த்திக் கட்டினான். தன் பகை மன்னர்களின் தங்கக் கிரீடங்களை உருக்கி இக்கோபுரத்தின் தங்கக் கலயங்களைச் செய்தான். திருவண்ணாமலை, காஞ்சி ஏகாம்பரநாதன் கோவில், திருவீரட்டாணம், ஜெம்புகேஸ்வரம், மதுரை, காளகஸ்தி ஆகிய சிவத்தலங்களில் திருப்பணிகளும் தானங்களும் செய்தான்.

"திருப்பதிகளெல்லாம் கும்பிட்டருளி தேவதானங்களும் திருவிடையாட்டங்களும் இறையிவி விட்டருளி திருப்பணியெல்லாம் செய்தருளி" என்று ஆக்கூர் சாசனம் (SI XII; 129) இவனது பக்தி உள்ளத்தைச் சுட்டிக் காட்டும்.

இத்தகைய சிவபக்தனான கோப்பெருஞ்சிங்கனுக்குரிய பட்டயங்களுள் "பரராஜ அந்தப்புர பந்திகாரன்" என்பதும் ஒன்று என இவனது ஆற்றூர் சாசனம் கூறும் (SII XII; 120). பிற மன்னர்களின் அந்தப்புரத்தை சிறைபிடிப்பவன் என்பதே இப்பட்டத்தின் பொருளாகும்.

தன் பகை நாடான சோழ நாட்டின் மீது படையெடுத்த இக்கோப்பெருஞ்சிங்கன் மூன்றாம் ராஜராஜனை சிறை பிடித்தான். கோப்பெருஞ்சிங்கனுடன் போரிட்ட போசல நாட்டு மன்னன் மூன்றாம் ராஜராஜனை சிறை மீட்டான். இவ்விரு நிகழ்வுகளையும் 'திருவய்ந்திரபுரக் கல்வெட்டு' குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டில் கோப்பொருஞ்சிங்கன் சோழநாட்டுக் கோவில்களை இடித்தசெயலும் அவனுடன் போரிட்டு வென்ற போசல நாட்டு மன்னன் செய்த கொடுஞ் செயல்களும் இடம் பெற்றுள்ளன. அக்கல்வெட்டு வருமாறு: (கல்வெட்டு வரிகளில் அழுத்தம் எமது)

1. ஸ்வதி ஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ ராஜராஜதேவர்க்குயாண்டு 15 ஆவதின் எதிராம் ஆண்டு பிரதாப சக்கரவர்த்திஹோய்ஸண ஸ்ரீ வீரநரசிம்மதேவன் சோழசக்கரவர்த்தியைக்

2. கோப்பெருஞ்சிங்கன் சேந்தமங்கலத்தில் பிடித்துக் கொடு இருந்துதன் படையை இட்டு ராஜ்யத்தை அழித்துத் தேவாலயங்களும்விஷ்ணு ஸ்தானங்களும் அழிகையிலே இப்படித்தேவன் கேட்டருளி,

3.சோழமண்ல பிரதிஷ்டாசாரியன் என்னும் கீர்த்திநிலை நிறுத்தி அல்லது எக்காளம் ஊதுவதில்லை என்று தோரசமுத்திரத்தினின்றும் எழுந்துவந்து, மகாராஜ்ய நிர்மூலமாடி இவனையும் இவன் பெண்டு பண்டாரமும் கைக்கொண்டு

4.பாச்சூரிலே விட்டு கோப்பெருஞ்சிங்கன் தேசமும் அழித்துச் சோழச் சக்கரவர்த்தியையும் எழுந்தருளிவித்துக்கொடு என்றுதேவன் திருவுளமாய் ஏவ, விடை கொண்டு எழுந்த ஸ்வஸ்திஸ்ரீமான் மகாபிரதானி பிரம

5.தண்டினகோபன் ஜகதொப்பகண்டன் அப்பண தன்னக்க னும், சமுத்திரகோபய்ய தன்னக்கனும் கோப்பெருஞ்சிங்கன்இருந்த எள்ளேரியும், கள்ளியூர் மூலையும், சோழகோன்இருந்த தொழுதகையூரும் அஷ்த்து

6.வேந்தன் முதலிகளில் வீரகங்க நாடாள்வான், சீனத்தரையன்ஈழத்து ராஜா பராக்கிரமபாகு உள்ளிட்ட முதலி 4 பேரையும் கொன்று இவர்கள் குதிரையும் கைக்கொண்டு, கொல்லிசோழகோன் குதிரைகளையும் கைக்கொண்டு,

7. பொன்னம்பல தேவனையும் கும்பிட்டு எதுத்துவந்த தொண்டைமாநல்லூர் உள்ளிட்ட தமக்கூர்களும் அழித்து . . . .வெட்டிவித்து திருப்பாதிரிப்பூலியூரிலே வீற்றிருந்து,திருவதிகை திருவெக்கரை உள்ளிட்ட ஊர்களும் அழித்து,

8. வாரணவாசி ஆற்றுக்குத் தெற்கு, சேந்தமங்கலத்துக்கும் கிழக்கு கடலிலே அழியூர்களும், குடிக்கால்களும் சுட்டும் அழித்தும் பெண்டுகளைப் பிடித்தும் கொள்ளைகொண்டும் சேந்தமங்கலத்தே எடுத்து

9. விடப்போகிற அளவிலே கோப்பெருஞ்சிங்கன் குழைந்துசோழ சக்கரவர்த்தியை எழுந்தருளிவிக்கக் கடவதாகதேவனுக்கு விண்ணப்பம் செய்ய, இவர் விட்டு, நமக்கும்ஆள்வரக் காட்டுகையிலே, சோழ சக்கரவர்த்தியைஎழுந்தருளுவித்து கொடு போந்து ராஜ்யத்தே புகவிட்டது உ"

சோழ மன்னர்கள் பாண்டிய நாட்டின் மீதும் இலங்கையின் மீதும் படையெடுத்தபோது பகை மன்னர்களின் மகன், மனைவி, தாய் ஆகியோரின் மூக்கை அறுத்ததை ஏற்கனவே கண்டோம். மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் (1623-1659) காலத்தில் பகை நாட்டுக் குடிமக்களின் மூக்கை அறுக்கும் பழக்கமாக இது வளர்ச்சியுற்றது.

கந்திருவ நரசராஜன் (1638-1659) என்ற மைசூர் மன்னன் திருமலை நாயக்கருடன் போரிட, தன் படையை அனுப்பினான். அப்படை மதுரை நோக்கி வரும்போது வழியிலுள்ள ஊர்களை எல்லாம் கொள்ளையிட்டும், நெருப்பிட்டும் அழித்தது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்ற வேறுபாடு இன்றி எதிர்பட்டோர் மூக்குகளையெல்லாம் அறுத்தது. அறுபட்ட மூக்குகள் சாக்கு மூட்டைகளில் மைசூருக்குச் சென்றன. நாட்டுத் துரோகிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனையாகவே மூக்கறுத்தல் இருந்தது. மைசூர் மன்னன் எதிரி நாட்டு மக்களுக்கு வழங்கும் தண்டனையாக இதை மாற்றினான். மூக்கறுப்பதற்கென்றே ஓர் இரும்புக் கம்பியை மைசூர்ப்படை வீரர்கள் வைத்திருந்தனர். இக்கருவியின் துணையால் மூக்கையும் மேலுதட்டையும் அறுத்துவிடுவார்கள். அறுத்த மூக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது. மீசை உள்ள மேலுதட்டுக்குப் பரிசு அதிகம் (சத்தியநாதய்யர் 1956; 50-52).

இதற்குப் பழிவாங்கும் முறையில் தன் தம்பி குமாரமுத்துவின் தலைமையில் ஒரு படையை திருமலை நாயக்கர் மைசூருக்கு அனுப்பினார். மைசூர்ப் படைவீரர்கள் தமிழ்நாட்டில் நிகழ்த்திய மூக்கறுத்தலை மைசூரில் நாயக்கர் படை மேற்கொண்டது. இறுதியில் மைசூர் மன்னனைக் கைது செய்து அவன் மூக்கையும் அறுத்தனர்.

ஃரையர் என்ற ஆங்கில அறுவை மருத்துவர் 1673க்கும் 1681க்கும் இடைப்பட்ட காலத்தில் மைசூர்ப் பகுதியில் சுற்றுப்பயணம் செய்துள்ளார். மூக்கறுக்கும் செயல் குறித்து அவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீரங்கப்பட்டணத்தின் மன்னர் தன் படைவீரர்களுக்கு, பகைவர்களின் மூக்கை அறுக்கும் பயிற்சி கொடுத்துள்ளார். ஒரு கோணிப்பை அளவிலான மூக்குகள் மன்னரின் காலை உணவுக்கு வழங்கப்பட்டன. உயிர்களைக் கொல்வது அவரது சமய நம்பிக்கைக்கு மாறானது என்பதால் அவர் இவ்வாறு செய்கிறாராம்

கி.பி. எட்டாம் நூற்றாண்டில் ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட சிருங்கேரி மடம் கருநாடகத்தில் உள்ளது. பரசுராமபாகு என்ற மராட்டிய இந்துத் தளபதி கருநாடகத்தின் மீது படையெடுத்தபோது இந்து மடம் என்று சிருங்கேரி மடத்தைக் கொள்ளையடிக்காமல் விட்டுவிடவில்லை. 60 லட்சம் பெருமானம் உள்ள அணிகலன்கள் யானை, குதிரை, பல்லக்கு ஆகியவற்றை அங்கிருந்து கொள்ளையடித்தான். சிருங்கேரி மடாதிபதிகள் வணங்கி வந்த சாரதா தேவியின் விக்ரகத்தைப் புரட்டிப் போட்டான். பல பிராமணக் குருக்களைக் கொன்றான். உயிருக்குப் பயந்து போய் சங்கராச்சாரியார் காஞ்சிலா என்ற இடத்திற்கு ஓடி ஒளிந்தார். அங்கிருந்தபடியே மைசூரில் இருந்த திப்பு சுல்தானுக்கு உதவி வேண்டி கடிதம் எழுதினார். திப்புவும் சாரதா பீடத்தை மீண்டும் நிறுவ பணமும் தானியங்களும் தந்துதவினான். சாரதா பீடத்தைக் காக்க படைகளையும் அனுப்பினான். இச்செய்திகளை சிருங்கேரி சாரதா மடத்திலுள்ள ஆவணங்களால் அறிகிறோம் (சிவண்ணா, 1999 : 4142).

தஞ்சையை ஆண்ட மராத்திய இந்து மன்னன் ஹாஜி (16851712) ராணி மங்கம்மாளின் ஆளுகையில் இருந்த திருச்சி பகுதிக்கு தன் படைகளை அனுப்பிக் கொள்ளையடித்தான்.

ஆர்.எஸ்.எஸ். நிறுவனரான ஹெட்கேவார் காலமான பிறகு அவரையடுத்து அதன் தலைவராக விளங்கியவர் கோல்வல்கர். ஆர்.எஸ்.எஸ்.க்காரர்களால் ஸ்ரீகுருஜி என்றழைக்கப்படும் அவர் இந்தியாவின் மீது படையெடுத்த முஸ்லீம் படையெடுப்பாளர்கள் குறித்து:

அந்தப் படையெடுப்பாளர்கள் நமது நாட்டுப் பெண்கள் பலரைக் கற்பழித்தனர். நமது கோவில்களையும், யாத்திரைத் தலங்களையும் தகர்த்துத் தரைமட்டமாக்கியவர்கள். சுகபோகங்களைத் தருவதாக ஆசை காட்டியோ அல்லது வாள்முனையில் மிரட்டியோ பெரும் எண்ணிக்கையினரைத் தமது மதத்திற்கு மாற்றினார்கள்.

என்று எழுதியுள்ளார் (கோல்வல்கர், 1992 : 8) . 'ஸ்ரீ குருஜி' குறிப்பிடும் கொடுமைகள் இந்திய நாட்டு வரலாற்றில் புதிய செய்திகளல்ல என்பதை இதுவரை நாம் பார்த்த வரலாற்றுச் சான்றுகள் உணர்த்துகின்றன. இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் செய்த கொடுஞ்செயல்களை சைவ, வைணவ, பெளத்த, சமணத்தைப் பின்பற்றிய இந்திய மன்னர்களும் நிகழ்த்தியுள்ளனர். இதனடிப்படையில் சைவமும், வைணவமும் கொள்ளையடித்தல், கோவிலிடித்தல், பெண்களைக் கவர்தல் ஆகிய சமூக விரோதச் செயல்களை வலியுறுத்துகின்றன என்று பொதுப்படையாக கூறிவிட முடியுமா? படையெடுப்பு என்ற பெயரில் கொடூரமான, அநாகரிகமான செயல்களை மேற்கொள்வோர் மதங்கடந்து நிற்பவர்கள் என்பதுதான் உண்மை. அவர்களுக்கு வேண்டுவன எல்லாம் தங்கமும், வெள்ளியும், வெண்கலமும்தான். முதலாம் இராஜேந்திரன் தனது வடஇந்தியப் படையெடுப்பின் போது வடஇந்தியாவிலுள்ள மதுரா, என்ற நகரைக் கைப்பற்றினான். இந்நகர்தான் கஜினி முகம்மதுவின் தாக்குதல்களுக்கு அடிக்கடி ஆளான நகரமாகும். இது குறித்து கே.கே. பிள்ளை (1981; 278, 279) பின்வருமாறு அவதானிப்பார்.

அந்நகர் அக்காலத்தில் செல்வமும் புகழும் பொதிந்து காணப்பட்டதால் அந்நகரின் மேல் கஜினி முகம்மது பன்முறை தாக்குதல் தொடுத்தான். பன்முறை அதைக் கொள்ளையிட்டான். இவ்வட மதுரையை இராசேந்திரனும் வென்று கைப்பற்றினான். இவ்விரு மன்னரின் போர்களுக்கிடையே ஒரு தொடர்பு காண விழைவதில் வழுவேதுமில்லை.

தனது இலங்கைப் படையெடுப்பின்போது இலங்கைக்கு ராஜேந்திரன் நெருப்பூட்டியதை அவனது திருவாலங்காட்சுச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. மேலும் ஈழ நாட்டு கிராமங்களை தஞ்சைப் பெருவுடையார் கோவிலுக்குத் தானமாக ராசேந்திரன் வழங்கினான். பொலனறுவை என்ற ஊரை, ஜனநாதமங்கலம் என்று பெயர் மாற்றியதுடன் அங்கு சிவன் கோவில் ஒன்றைக் கட்டுவித்தான். ஆதிக்கத்தை நிலைநாட்டவும் பொருளைக் கவரவும் மன்னர்கள் நிகழ்த்தும் போர்களில் அறநெறிகள் பார்க்கப்படுவதில்லை என்பதே வரலாற்று உண்மை. இவ்வுண்மைக்கு கோரி முகம்மது, கஜினி முகம்மது, மாலிக்கபூர் போன்ற இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் மட்டுமின்றி இராஜராஜன், இராஜேந்திரன் என இந்து மன்னர்களும் எடுத்துக்காட்டாக அமைகின்றனர். இதனால்தான் ஜார்ஜ் ஸ்பன்சர் என்பவர் சோழ மன்னர்களின் இலங்கைப் படையெடுப்பு குறித்து, தாம் எழுதிய கட்டுரைக்கு ‘The Politics of Plunder?, ?The Cholas in the 11th Century Ceylon? (அரசியல் கொள்ளை பதினோறாவது நூற்றாண்டு இலங்கையில் சோழர்கள் என்று தலைப்பிட்டுள்ளார்.

சோழ மன்னர்களின் இலங்கைப் படையெடுப்பை வீரச்செயல் என்று தமிழர்கள் கருதினால் சோழ மன்னர்கள் நிகழ்த்திய கொள்ளையென்று சிங்களவர் அதைக் கருதுகின்றனர். உணர்ச்சி வயப்படாமல் சிந்தித்தால் அவ்வாறு அவர்கள் கருதுவதில் நியாயம் உள்ளது என்பது புலனாகும். அதே நேரத்தில் இலங்கையில் வாழும் இன்றைய பெளத்தர்கள் சோழர்களின் படையெடுப்பை தமிழ்நாட்டுச் சைவர்களின் படையெடுப்பு என்று சமய வண்ணம் பூசி இன்றைய இலங்கைத் தமிழ்ச் சைவர்களை வெறுப்புடன் நோக்கினால் அது எந்த அளவு தவறானதோ, அந்த அளவு தவறானது கஜினி முகம்மது, கோரி முகம்மது ஆகியோரின் படையெடுப்பை இஸ்லாமியப் படையெடுப்பு என்று கருதுவதும், அப்படையெடுப்பாளர்களின் வாரிசாக இன்றைய இஸ்லாமியர்களை நோக்குவதும், படையெடுப்பு என்ற பெயரால் கொள்ளையடிக்கும் மன்னர்கள் எதாவது ஒரு மதத்தைச் சார்ந்துதான் இருப்பார்கள். இது இயற்கையானது. இதற்கு இஸ்லாமிய சமயம் சார்ந்த படையெடுப்பாளர்களும் விதிவிலக்கல்ல.

நன்றி: தட்ஸ் தமிழ் -> விசை

Tuesday, October 07, 2008

பழி தீர்த்தலும் மன்னித்தலும்!

சகோதரர் கோவி.கண்ணனின் 'இறைவன் படைக்கிறானா?' பதிவின் பின்னூட்டத்தில் திரு. தருமி இஸ்லாம் தொடர்பான சில கேள்விகளை கேட்டிருந்தார். அவரது சந்தேகங்களுக்கான பதில்களை எனக்குத் தெரிந்த அளவில் இங்கு தருகிறேன்.

முதலில் ஒரு விஷயத்தை தெளிவு படுத்தி விடுவது நல்லது என்று நினைக்கிறேன். ஒரு கருத்துப் பரிமாற்றமாக மட்டுமே நான் இதில் பங்கு பெறுகிறேனே தவிர விவாதமாக அல்ல. விவாதங்களினால் எந்த ஆக்கபூர்வமான விளைவுகளும் ஏற்படப் போவதில்லை என்பது எனது தாழ்மையான கருத்து!

தருமி அவர்களின் கேள்வி 1:

//அக்கிரமத்திற்கு எதிராக பழிதீர்ப்பது அனுமதிக்கப் பட்டிருந்தாலும் மன்னித்து விடுவதே சிறந்தது என்று குர்ஆன் சொல்கிறது://


இந்த வாக்கியத்தின் முதல் பகுதியைத் தான் நான் கேள்விக்குட்படுத்துகிறேன். எந்த ஒரு மதத்திலும் பழிதீர்ப்பதையோ, கொலை செய்வதையோ நியாயப்படுத்துதல் என்பதை ஒத்துக்கொள்ள முடியவில்லை.


//இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையே யாகும்;//


இன்னா செய்தாரையும் ஒறுத்தல் பற்றிப் பேசினால்தானே அது நல்வழிப்படுத்தும் வழியாக இருக்க முடியும். பழிக்குப் பழி என்று போதிப்பதை எப்படி ஒத்துக்கொள்ள முடியும்?


//அவர்களுக்கு அக்கிரமம் செய்யப்பட்டால் (அதற்கு எதிராக நீதியாகத் தக்க முறையில்) பழி தீர்ப்பார்கள். (42:39)


எவரொருவர் அநியாயம் செய்யப்பட்டபின், (அதற்கு எதிராக நீதியாக) பழி தீர்த்துக் கொள்கிறாரோ, அ(த்தகைய)வர் மீது (குற்றம் சுமத்த) யாதொரு வழியுமில்லை. (42:41)//


மேற்கண்ட இரு வாசகங்களும் தனிமனித நீதிபற்றிதான் கூறுகிறதாகத் தெரிகிறதேயொழிய நீங்கள் கீழ்க்கண்டவாறு சொல்வதுபோல்- //குழப்பம் விளைவிப்பவனையும், கொலைக்குப் பழியாகவும் தவிர்த்து கொலை செய்யாதே என்பது இஸ்லாமிய அரசாங்கங்களுக்கான கட்டளை.// அரசாங்களுக்கு உரிய கட்டளைகளாகத் தெரியவில்லையே ..

பழிதீர்ப்பதும் கொலை செய்வதும்:

நல்லறிவாளர்களே! கொலைக்குப் பழி தீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு. (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம். (குர்ஆன் 2:179)

பழி தீர்ப்பது அனுமதிக்கப் பட்டிருப்பதன் நோக்கம், 'நாம் பழி தீர்க்கப் பட்டு விடுவோம்' என்ற அச்சத்தினால் குற்றமிழைக்க நினைப்பவர்களும் அதை விட்டு தவிர்ந்து கொள்ள வேண்டும் என்பதால்தான். அப்படி இல்லாமல், என்ன குற்றம் புரிந்தாலும் நாம் மன்னிக்கப் பட்டு விடுவோம் என்ற நிலை இருந்தால், அது குற்றங்கள் மேலும் பெருக வழி வகுக்குமேயல்லாது குறைக்காது.

இன்னா செய்தாரை ஒறுத்தல்:

எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால், நிச்சயமாக, அது மிக்க உறுதியான (வீரமுள்ள) செயலாகும். (42:43)

அக்கிரமம் இழைக்கப்பட்ட ஒரு நபர் பழிதீர்த்துக் கொள்ள அனுமதி அளிக்கப் பட்டிருக்கிறதேயொழிய இது கட்டளையோ போதனையோ அல்ல. அப்படி அனுமதிக்கப் பட்டிருப்பதுகூட குற்றச் செயல்கள் பெருகாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். மாறாக, பழிதீர்ப்பதை விட குற்றவாளியை மன்னிப்பதன் மூலம் இன்னா செய்தாரை ஒறுப்பதே உறுதியான வீரமுள்ள செயல் என்று போதிக்கிறது இஸ்லாம். அனுமதி, போதனை இவ்விரண்டிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொண்டால் இதையும் புரிந்து கொள்ளலாம்.

தனிமனித நீதியும் அரசாங்கங்களுக்கான கட்டளையும்:

அவர்களுக்கு அக்கிரமம் செய்யப்பட்டால் (அதற்கு எதிராக நீதியாகத் தக்க முறையில்) பழி தீர்ப்பார்கள். (42:39)

எவரொருவர் அநியாயம் செய்யப்பட்டபின், (அதற்கு எதிராக நீதியாக) பழி தீர்த்துக் கொள்கிறாரோ, அ(த்தகைய)வர் மீது (குற்றம் சுமத்த) யாதொரு வழியுமில்லை. (42:41)

அநீதி இழைக்கப் பட்டவருக்குத்தானே இந்தச் சலுகை? அவர் மீது அநீதி இழைக்கப் பட்டிருக்கிறது என்று யார் முடிவு செய்வது? அநீதி இழைத்தவர் செல்வாக்கு மிக்க பலசாலி என்றால், பாதிக்கப்பட்ட எளியவர் எப்படி அவரை பழி தீர்ப்பார்? அநியாயமாக கொல்லப்பட்ட ஒருவருக்காக பழிதீர்க்க யாரும் இல்லை என்றால், கொலை செய்தவர் தண்டனையின்றி தப்பிவிட முடியுமா? தனக்குப் பிடிக்காத ஒரு நபரை ஒருவர் பழி தீர்த்து விட்டு, 'அவர் எனக்கு அநீதி இழைத்ததால்தான் நான் அப்படிச் செய்தேன்' என்று பொய் சொல்லி தப்பிக்க முடியுமா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் என்ன என்று யோசித்தாலே, பாதிக்கப் பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுத்தர, குற்றங்களுக்குத் தண்டனை வழங்க, ஒரு அரசாங்க அமைப்பு அவசியம் என்பது தெளிவாகும். குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவது அரசின் கடமைதானே தவிர தனிநபர்களின் பொறுப்பு அல்ல.

மற்ற கேள்விகளையும் அடுத்தடுத்த பதிவுகளில் தொடர்கிறேன்..

Tuesday, April 01, 2008

இரும்பு மனிதர் மிட்டல்!

Forbes பத்திரிக்கையின் சமீபத்திய கணக்கெடுப்பின்படி உலகின் ஆகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்ஸுக்கு அடுத்ததாக நான்காம் இடத்தில் இருப்பவர் லக்ஷ்மி மிட்டல். இங்கிலாந்தில் வசிக்கும் பணக்காரர்களின் பட்டியலில் 2005-லிருந்து முதலிடத்தை பெற்றிருப்பவரும் இவர்தான். இவரது நிறுவனமான Arcelor Mittal உலக இரும்பு உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. மிட்டல் இந்நிலையை அடைந்தது மிகக் குறுகிய காலத்தில்தான்.

கிடைக்கும் வாய்ப்புகளை திறமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் சாதுரியம், துணிச்சலான முடிவுகள், நட்டத்தில் நடந்துக் கொண்டிருக்கும் நிறுவனங்களை லாபகரமானதாக மாற்றும் திறமை; இவையே அவரது வெற்றியின் ரகசியங்கள் என்று சொல்லப்படுகிறது.

முதன் முதலாக மிட்டலின் பெயர் ஊடகங்களில் பரபரப்பாக அடிபட்டது 2002-ல். அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் டோனி ப்ளேர் ருமேனிய அரசாங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதினார். ருமேனிய அரசிற்கு சொந்தமான இரும்பு ஆலை ஒன்றை மிட்டலுக்கு விற்பதை ஆதரித்து அக்கடிதம் எழுதப் பட்டிருந்தது. அதற்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் மிட்டல் டோனி ப்ளேரின் கட்சி வளர்ச்சி நிதிக்கு 125,000 பவுண்டுகள் நன்கொடை அளித்திருந்தார். பிரிட்டிஷ் குடிமகனாகக் கூட இல்லாத ஒருவருக்காக பிரிட்டிஷ் பிரதமர் பரிந்து பேசுவது ஏன் என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின. இருப்பினும் 'தான் செய்ததில் தவறு ஒன்றுமில்லை' என ப்ளேர் சமாளித்து விட்டார்.

மிட்டலின் குடும்பத்தினர் ஏற்கனவே இந்தியாவில் இரும்புத் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள்தான். அதே துறையில் செல்வாக்கு மிக்கவையாக விளங்கிய இந்திய அரசு நிறுவனங்கள் மற்றும் டாடா போன்ற மெகா நிறுவனங்களுடன் போட்டியிட்டு தனது நிறுவனத்தை வளர்ப்பது மிக சிரமமான காரியம் என்று உணர்ந்த மிட்டலின் தந்தை தனது 25 வயது மகன் இந்தோனேஷியாவில் ஒரு இரும்பு ஆலை அமைக்க உதவினார். இளைய மிட்டலின் மேற்பார்வையினால் அந்த ஆலை வெற்றிகரமாக நடக்கத் தொடங்கியது. முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளும் மிட்டல் வீட்டுக் கதவை தேடி வந்து தட்டின!

மிட்டலின் ஆலைக்கு கச்சாப்பொருளை விற்பனை செய்து கொண்டிருந்த டிரினிடாட் அரசிற்குச் சொந்தமான நிறுவனம் ஒன்று மிகச் சிரமதசையில் நடந்து கொண்டிருந்தது. மிட்டலின் வெற்றிகரமான தொழில் முனைப்பைப் பார்த்த டிரினிடாட்காரர்கள், தங்கள் நிறுவனத்தை ஒப்பந்த முறையில் எடுத்து நடத்தும்படி மிட்டலுக்கு அழைப்பு விடுத்தனர். மேனேஜ்மெண்ட் வட்டாரங்களில் இதை turn-around strategy என்பார்கள். மகிழ்ச்சியுடன் அப்பொறுப்பை ஏற்ற மிட்டல் 1994-ல் அந்நிறுவனத்தை விலைக்கு வாங்கிக் கொண்டார்.

கிட்டத்தட்ட அதே சமயத்தில் மெக்ஸிகோ, கனடா மற்றும் ஜெர்மனியில் மூன்று இரும்பு ஆலைகளை மிட்டல் வாங்கினார். நட்டத்தில் நடந்து கொண்டிருந்த இந்நிறுவனங்களை யார் தலையிலாவது கட்டிவிட அந்தந்த நாட்டு அரசுகள் முயன்று கொண்டிருந்தன! ஆனால் மிட்டலின் கண்களுக்கோ அவற்றில் புதைந்திருந்த வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் தெளிவாகத் தெரிந்தன.

90-களின் இறுதியில், அமெரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் மிட்டல் கால் பதித்திருந்தார். 2006-ல் பிரான்ஸின் பழம்பெரும் நிறுவனங்களில் ஒன்றான Arcelor-ஐ மிட்டல் வாங்க முயன்றது அங்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலவித எதிர்ப்புகளையும் சமாளித்துத்தான் மிட்டல் Arcelor-ஐ கைப்பற்றினார்.

இன்று சீனாவில் மிட்டலுக்குச் சொந்தமாக ஒரு ஆலை இருக்கிறது. இன்னொன்றில் பங்குதாரராக இருக்கிறார்.

Arcelor Mittal நிறுவனத்தின் ஊக்க வாசகம் (Motto), 'துணிவு எல்லாவற்றையும் மாற்றிவிடும்!' (Boldness Changes Everything!)என்கிறது. இந்நிறுவனம் கடந்து வந்த பாதைகளையும், அவர்களின் சாதனைகளையும் பார்க்கும்போது இவை வெறும் வார்த்தைகளல்ல என்பது புரிகிறது.