விவேக் ஓப்ராய்!
- இவர் தமிழ் நாட்டை சேர்ந்தவர் அல்ல!
- தமிழ் படம் எதிலும் நடித்தவரும் அல்ல!
- தமிழ் பேசக்கூடத்தெரிந்தவர் அல்ல!
- தமிழகத்தில் அவருக்கு ரசிகர் மன்றம் இருந்ததாக தெரியவில்லை.
சுனாமி பேரலைகளால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி அறிந்ததும் விரைந்து வந்து, அரசினருடன் பேசி முறையான அனுமதி பெற்று, ஏற்பாடுகள் செய்து, ஒரு கிராமத்தை தத்து எடுத்து, அவர்களுடனேயே தங்கி, பாதிப்படைந்த மக்களுக்கு முடிந்த அளவுக்கு ஒரு சீரான வாழ்க்கையை அமைத்து கொடுத்தபின்னரே ஊருக்கு திரும்புவேன் என்று சபதமிட்டு சேவை செய்து வருகிறார்.
ஒரு முன்னணி கதாநாயகன் என்ற முறையில் அவரது நாட்கள் ஒவ்வொன்றும் கால்ஷீட்டுகளாக பல ஆயிரங்களுக்கோ சில லட்சங்களுக்கோ விலை போகக்கூடியதாக இருக்கும். அதையும் அவர் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. பல நாட்களுக்கு ஸ்டுடியோவுக்கே போகவில்லையென்றால், திரையுலகில் தமது இடத்தை வேறு யாராவது கைப்பற்றி விடுவார்களோ என்று கூட கவலைப்படுவதாக தெரியவில்லை.
சரி, இந்த கதையெல்லாம் இப்போ எதற்கு என்கிறீர்களா?
தமிழகத்துடன் அதிக தொடர்பு இல்லாத விவேக்கால் இந்த அளவுக்கு செய்ய முடியும் என்றால்,
- தமிழக ரசிகர்களிடமிருந்து ஒரு துளி வியர்வைக்கு ஒரு தங்க காசு என்ற கணக்கில் வருமானம் பெற்றவர்கள்,
- மாநிலமெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களையும் ரசிகர் மன்றங்களையும் கொண்டவர்கள்,
- 'தலைவனின்' படத்தை முதல் காட்சியில் பார்க்காவிட்டால் உயிரையே விடக்கூடிய அபிமான ரசிகர்களை கொண்டவர்கள்,
- நாட்டிற்காக எதையும் செய்வேன் என வீர வசனம் பேசுபவர்கள்,
- 'வருவேன், வருவேன்' என்று வந்து கொண்டே இருப்பவர்கள்
- ரசிகர் மன்ற கூட்டங்களை அரசியல் மாநாடு போல நடத்தி, பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வாதிகளுக்கே வயிற்றில் புளி கரைக்க முயல்பவர்கள்,
- வருங்கால முதல்வர் என்ற கனவுகளுடன் பவனி வருபவர்கள்,
இவர்களெல்லாம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இன்னும் என்னவெல்லாம் செய்ய முடியும்? செக் புத்தகத்திலிருந்து ஒரு தாளை கிழித்து கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டால் போதுமா? என்று நினைத்துப்பார்த்தேன். அவ்வளவுதான்!
ஒன்று மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். தமிழகத்தின் வருங்கால முதல்வர் திரையுலகிலிருந்துதான் வருவார் என்ற 'தலைவிதி' இருக்குமானால், எனது ஒட்டு விவேக்கிற்கே!