Sunday, March 06, 2005

திருமதி அரஃபாத்திடமிருந்து ஒரு மின்னஞ்சல்...

சென்ற வாரம் எனது inbox-ல் வந்து கிடந்த ஒரு மின்னஞ்சலின் அனுப்புனர் பெயரைப் பார்த்து நான் மயக்கம் போட்டு விழாத குறைதான்.

அந்தக் கடிதம் இப்படி தொடங்குகிறது; “பன்னாட்டு ஊடகங்கள் மூலம் உலக நடப்புகளை, முக்கியமாக மத்திய கிழக்கு, பாலஸ்தீன விவகாரங்களை அறிந்து கொண்டிருந்தீர்களெனில் இந்த கடிதம் உங்களுக்கு ஆச்சரியத்தை தராது” என்று தொடங்கி, பிறகு அறிமுகப் படலம். “ நான் திருமதி. சுஹா அரஃபாத், சமீபத்தில் பாரிஸில் மரணமடைந்த பாலஸ்தீன தலைவரின் மனைவி”.

என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை, எனது மின்னஞ்சல் முகவரி ஒரு பெரிய தலைவரின் மனைவிக்கு தெரியும் அளவிற்கு நான் பிரபலமாகி விட்டேனா என்று.

அடுத்தவரியில் அவர் தனது தற்போதைய நிலையை விளக்கிய போது அவர் மேல் பெரும் அனுதாபம் ஏற்பட்டது. அதை அவரது வார்த்தைகளிலேயே தருகிறேன், “I have been thrown into a state of antagonism, confusion, humiliation, frustration and hopelessness by the present leadership of the Palestinian Liberation Organization and the new Prime Minister. I have even been subjected to physical and psychological torture. As a widow that is so traumatized, I have lost confidence with everybody in the country at the moment.” த்ஸு.. த்ஸு..பாவம் இல்லே!

அது சரி, எதற்காக இதையெல்லாம் என்னிடம் சொல்கிறார் என்கிறீர்களா? அவரது கடிதத்தின் சாரம் இதுதான், “தற்போதைய பாலஸ்தீன அரசாங்கம் எனது கணவர் எனக்குத் தந்த பணம், சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து என்னையும் எனது மகளையும் நடுத்தெருவிலாக்க முயற்சி செய்து வருகிறது. நான் ஒரு 20 மில்லியன் டாலரை ஒரு வெளி நாட்டு நிறுவனத்தில் டெபாஸிட் செய்துள்ளேன். அதை நீங்கள் உங்கள் கணக்கில் பெற்று எங்களுக்காக பாதுகாப்பாக வைத்திருந்தால் நான் மிக நன்றியுடையவளாவேன். தங்களின் இந்த உதவிக்காக ஒரு குறிப்பிட்ட சதவிகித தொகையை தங்களுக்கு அளிக்கவும் சித்தமாக இருக்கிறேன். நான் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நீங்கள் உறுதிப்படுத்தும் பட்சத்தில் இதுபோன்ற தொகையை மேலும் மேலும் உங்கள் கணக்கிற்கு அனுப்ப நான் தயார். தயவு செய்து இந்த விஷயத்தை மிக ரகசியமாக வைத்துக் கொள்ளவும்.”

ஒரு அபலை விதவைப்பெண்ணிற்கு உதவ வேண்டும் என்று மனம் துடித்தாலும், அவ்வளவு பெரிய தொகையை வைத்து பாதுகாப்பது ரொம்ப ரிஸ்க் என்பதால் நான் அவருக்கு பதில் எழுதவில்லை. அவருக்காக அனுதாபப்படுவதைத் தவிர என்னால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை. அவர் வேறு யாருக்கும் இப்படி எழுதியிருக்கிறாரா? வேறு யாராவது அவருக்கு உதவுகிறார்களா என்பதும் தெரியவில்லை. பாவம் திருமதி. அரஃபாத்!

பின்குறிப்பு: திருமதி அரஃபாத்திற்கு தெரியும் அளவிற்கு நான் பிரபலமாகிவிட்டேனா என்று குறிப்பிட்டிருந்தேன் அல்லவா! அது மட்டுமல்ல, நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாகவும் ஆகிவிட்டேன் போலிருக்கிறது. எனது இமெயில் spam folder-ல் சுமார் 20 வெவ்வேறு லாட்டரி நிறுவனங்களிடமிருந்து வந்து இன்னும் திறக்கப்படாமலிருக்கும் மின்னஞ்சல்கள், அனைத்திலும் எனக்கே முதல் பரிசு விழுந்திருப்பதாக தலைப்பிலேயே அறிவிக்கின்றன. இதில் இன்னும் விஷேசம் என்னவென்றால், நான் எந்த லாட்டரியிலும் இதுவரை பங்கெடுத்ததேயில்லை.