Saturday, February 19, 2005

My Opinion..

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

நான் படித்த நாகூர் ரூமி நூல்கள்:

நூல் 1: இஸ்லாம் ஒரு எளிய அறிமுகம்

இஸ்லாம் பற்றிய தவறான கருத்துக்களை களைய வேண்டி அதற்கு எளிய அறிமுகத்தை கடின முயற்சியுடன் நாகூர் ரூமி அவர்களால் எழுதப்பட்ட நூல் தான் இது.

ஒரு ஹதீஸ் நினைவிற்கு வருகிறது- ஒரு பெரிய யுத்தத்திற்கு பின்னர் பெருமானார் தனது தோழர்களிடத்தில் ‘பெரிய போருக்கு தயாராகுங்கள்’ என்று கூறினார்கள்- தோழர்களுக்கு விளங்க வில்லை. விபரம் கேட்ட போது, பெருமானார், ‘மனதை அடக்கி ஆள்வதே அத்தகைய போர்’ என்று விளக்கம் கொடுக்கிறார்கள்.

இந்த ஹதீஸின் ஒளி பல பக்கங்களுக்கு வெளிச்சம் காட்டினாலும் நான் இருந்த பக்கத்தை மட்டும் இங்கே வெளிச்சம் போட்டு காட்ட விரும்புகிறேன்-
அதாகப்பட்டது பெருமானார் பேசியது அவர்களது தோழர்களுக்கு விளங்க வில்லை அதோடு அவர்கள் தாங்களாக ஒரு விளக்கம் கொடுத்துக் கொள்ளாமல் அதற்கு பெருமானாரிடமே விளக்கத்தை கேட்டறிந்தார்கள்.
இது போல் பெருமானார் கூறியது சிலருக்கு புரியாத காரணத்தால் அவர்களாகவே ஏதேதோ விளக்கம் கொடுத்து விட்டு ‘இப்படி தான் இதற்கு விளக்கம்’ என்று கங்கணம் கட்டி நேசத்துடன் கூறி வருகிறார்கள் ஆனால் அது உண்மையில் நேசம் அல்ல வேஷம் என்று சிலருக்கு மட்டுமே தெரிய வாய்ப்புண்டு.

இஸ்லாமிய மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை. அதாவது பெருமானார் அவர்கள் இஸ்லாத்தை ஏற்க சொல்லி போதித்தார்கள். அவ்வளவு தான், யாரையும் வற்புறுத்த வில்லை.

அப்படி என்றால் சிலர் வாளெடுத்து தலையை துண்டித்து விட்டு, ‘அல்லாஹ¤ அக்பர்’ என்று கூறுகிறார்களே என்ற கேள்வி எழலாம். அவர்கள் இஸ்லாத்தின் பெயரை தானே முன் வைக்கிறார்கள் என்றும் வாதிடலாம்.

அரபியில் அல்லாஹ் என்ற வார்த்தை இறைவனை குறிக்கும். அதாவது ஒரு அரேபிய கிறிஸ்தவர் இறைவனை குறிக்க அல்லாஹ் என்ற வார்த்தையை தான் பயன்படுத்துவார். பெருமானாரின் தந்தையின் பெயர் ‘அப்துல்லாஹ்’ என்பதாகும். பெருமானாரின் தந்தையை பெருமானார் அவர்கள் பார்த்தது கூட கிடையாது.
ஒருவன் யாரோ ஒரு அப்பாவியின் தலையை துண்டித்ததற்கு இறைவனுக்கு எப்படி சம்மந்தம் கிடையாதோ அப்படியே இஸ்லாத்திற்கும் அவனுக்கும் சம்மந்தமே கிடையாது. இந்த கருத்தை இந்த புஸ்தகம் தெளிவு படுத்தி விடுகிறது.

இந்த நூலை பற்றியும் தவறான விமர்சனங்கள் புரியாமல் தான் எழுந்துள்ளன. அவர்களுக்கு விளக்கம் பெற வேண்டும் என்ற ஆசையில்லை.

தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று கூறுபவர்களல்ல அவர்கள் தான் பிடித்த முயலையே ஒட்டகம் என்று வாதிட்டு நம்ப வைத்தும் விடுவார்கள். அந்த சாமர்த்தியசாலிகள்(?) அவர்களாக அறிய வேண்டும் என்ற ஆசையுடன் வரும் போது தக்க விளக்கம் இந்த புஸ்தகத்திலேயே இருப்பதை காண்பார்கள்.
யானையை பற்றி குருடர்கள் தடவி பார்த்து வெவ்வேறு விதமாக கூறிய கதை நமக்கு தெரிந்திருக்கும். ஆனால் நல்ல வெளிச்சத்தில் உண்மையான ராஜ பார்வையுடன் எல்லா பக்கமும் சென்று அருமையாக இஸ்லாம் பற்றிய விளக்கங்கள் கொடுக்கப் பட்டுள்ளது.

வெறுப்பை மூட்டை கட்டி வைத்து விட்டு விருப்புடன் படிக்க அனைவரையும் வேண்டுகிறேன்.

வஸ்ஸலாம்
அ.முஹம்மது இஸ்மாயில்

Tuesday, February 15, 2005

புத்தாண்டும் பெருநாளும்!

மூன்று ஆண்டுகளுக்குமுன் நோன்புப் பெருநாளுக்கு முதல் நாள் என் சீன நண்பர் ஒருவர் என்னிடம் வந்து “புத்தாண்டு வாழ்த்துக்கள்!” என்றார்.


இடையிடையில் சில சிறு குறிப்புகள் கொடுத்தால்தான், மேற்கொண்டு தொடரும் உரையாடலை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.

சிறுகுறிப்பு 1: சீனர்கள் தங்கள் புதுவருட பிறப்பை மிக விமரிசையாக கொண்டாடுவார்கள். அவர்களுக்கு வேறு சில திருநாட்கள் இருந்தாலும், புதுவருடம்தான் தலையாயது. பெரும்பான்மையான சீன நிறுவனங்கள் ஒரு வாரம், பத்து நாட்களுக்கு கூட விடுமுறை விட்டுவிடுவார்கள். தங்களது திருநாள் புத்தாண்டாக இருப்பதுபோல், மலாய், இந்தியர் போன்ற பிற இனத்தாருடன் அதிகம் பழகாத சீனர்கள், அவர்களின் திருநாட்களையும் அவரவர்களின் புத்தாண்டாகவே எண்ணிக்கொள்வது வழக்கம். இவர்களுக்கு தீபாவளி இந்தியர்களின் புத்தாண்டு, நோன்புப்பெருநாள் மலாய்காரர்களின் புத்தாண்டு.

நான் சீரியஸாக, “நன்றி நண்பரே!, ஆனால், இது எங்களுக்கு புத்தாண்டு அல்ல. நோன்புப்பெருநாள்!” என்றேன்.

“என்ன? இது புத்தாண்டு இல்லையா?”

“ஆமாம், எங்களுக்கு புத்தாண்டு வேறொரு நாள் வரும். அதை நாங்கள் சிறப்பாக கொண்டாடுவதில்லை!”

சிறுகுறிப்பு 2: சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய முஸ்லிம்களுக்கென்று சில பிரச்னைகள் உள்ளன. நான் முன்பு குறிப்பிட்ட பி.இ.அ.ப.சீனர்களுக்கு இந்தியர் என்றால் இந்துக்கள், முஸ்லிம்கள் எல்லோருமே மலாய்க்காரர்கள் என்ற ஒரு எண்ணம் உண்டு. நான் பள்ளிவாசலுக்கு போவதைப்பார்த்தால் ‘நீ முஸ்லிமா!’ என்று ஆச்சரியத்துடன் கேட்பார்கள். என் மனைவி பர்தா அணிந்திருப்பதால் கடைக்காரர்கள் அவரிடம் மலாயில் பேசத்தொடங்கி விடுவார்கள். என்னை ‘இடையில் மதம் மாறினாயா?’ என்று கேட்டவர்களும் உண்டு. மேலே சொன்ன என் நண்பருக்கு நான் ஒரு இந்தியன், ஆனால் முஸ்லிம் என்பது தெரியும்.

“என்ன? நீ புத்தாண்டு கொண்டாடுவதில்லையா? நீ ஒரு முஸ்லிம்தானே? சிங்கப்பூரில் உள்ள மலாய் முஸ்லிம்களெல்லாம் நாளை புத்தாண்டு கொண்டாடப் போகிறார்கள். பல ஆண்டுகளாக இங்கு வசிக்கும் நீ கொண்டாடப் போவதில்லையா? எப்போதுதான் இங்குள்ள வாழ்க்கைமுறைக்கு ஏற்ப உன்னை மாற்றிக் கொள்ளப் போகிறாயோ தெரியவில்லை!” என்று ஒரு நீண்ட உபதேசம் நிகழ்த்தத் தொடங்கிவிட்டார்.

“நண்பரே! நண்பரே! நாளை நான் கொண்டாடப்போவதில்லை என்று சொல்லவில்லையே! கொண்டாட்டத்தின் பெயர்தான் வேறு என்று சொன்னேன்!” என்று சொல்லி, இஸ்லாமிய பெருநாட்களைப்பற்றி சிறு விளக்கம் வேறு அளித்து அவரை அனுப்பி வைத்தேன்.

அதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் பெருநாட்களின்போது ‘உனக்கு எப்படி வாழ்த்து சொல்ல வேண்டும்?’ என்று கேட்டு, அதன்படி வாழ்த்து சொல்வார்.

சிறுகுறிப்பு 3: ஆங்கில காலண்டர் முறை பூமி-சூரியன் சுழற்சி அடிப்படையில் அமைந்திருப்பதை நாம் அறிவோம். சீன காலண்டர் முறை இதிலிருந்து மாறுபட்டது. அது சந்திர சுழற்சி முறையில் அமைந்தது. அதனால் சீன புத்தாண்டை ‘சந்திரப் புத்தாண்டு’ என்றும் அழைப்பார்கள்.

இந்த ஆண்டு சீனப் புத்தாண்டு விடுமுறை முடிந்தபிறகு என் நண்பரை முதன் முறையாக சந்தித்தபோது, நான் முந்திக்கொண்டு “புத்தாண்டு வாழ்த்துக்கள்!” என்றேன்.

“நன்றி! ஆனால் நான் உனக்கு வாழ்த்து சொல்ல முடியாதே! இது சீன புத்தாண்டு ஆயிற்றே!” என்றார் நண்பர்.

“தாராளமாக வாழ்த்து சொல்லலாம். இது முஸ்லிம்களுக்கும்தான் புத்தாண்டு” என்றேன் நான்.

“அப்படியா?” என்று ஆச்சரியப்பட்டார் நண்பர்.

“ஆம். சீன காலண்டரைப்போல இஸ்லாமிய ஹிஜ்ரி காலண்டரும் சந்திர சுழற்சி முறையில் அமைந்ததுதானே!” என்றேன்.

“இரு புத்தாண்டும் ஒரே நாளில்தான் என்பது எனக்கு இத்தனை நாள் தெரியாதே!”

“இத்தனை நாள் இப்படி இல்லை. இந்த ஆண்டுதான் இப்படி அமைந்துள்ளது” என்றேன் நான்.

“ஓஹோ.. அப்படியென்றால் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு இரு புத்தாண்டுகளும் சேர்ந்தே வரும் என்று சொல்!” என்ற நண்பர் எனக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்துவிட்டு விடைபெற்றார்.

இரண்டு காலண்டர் முறையும் சந்திர சுழற்சி முறையில் அமைந்தது என்றால் இரு புத்தாண்டுகளும் ஒரே நாளில் வருவதுதானே முறை? அதென்ன கணக்கு, இந்த ஆண்டும் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும்தான் இப்படி? என்று குழம்புகிறீர்களா? அதற்காகத்தான்,

சிறுகுறிப்பு 4: ஆங்கில காலண்டர் வருடத்தைவிட சீன/இஸ்லாமிய காலண்டர் வருடத்தில் 11 நாட்கள் குறைவு. ஆங்கில மாதங்கள் 30,31 நாட்களைக் கொண்டவை என்றால், சீன/இஸ்லாமிய மாதங்கள் 29,30 நாட்களைக் கொண்டவை. இவ்வாறு ஏற்படும் வித்தியாசத்தை சரிக்கட்ட சீன காலண்டரில் ஒரு ஏற்பாடு இருக்கிறது. மூன்று வருடங்களில் துண்டுவிழும் 33 நாட்களை சேர்த்து, மூன்று வருடங்களுக்கு ஒருமுறை ஒருமாதத்தை கூட்டிவிடுவார்கள். அதாவது இரண்டு வருடங்களுக்கு 12 மாதங்கள் என்றால் மூன்றாவது வருடத்தில் 13 மாதங்கள் இருக்கும். இஸ்லாமிய காலண்டரில் இந்த ஏற்பாடு கிடையாது. அதனால்தான் பல ஆண்டுகளுக்கு பிறகு இணைந்து வந்துள்ள இரு புத்தாண்டுகளும், இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கும் சேர்ந்தே வரும். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சீன காலண்டரில் 13வது மாதம் சேர்க்கப்படும்போது இந்த நிலை மாறிவிடும்.

கொசுறு தகவல்: சிங்கப்பூரில் அலுவலகங்கள், அடுக்கு மாடி வீடுகள் என சொத்துக்கள் வாங்கி வாடகைக்கு விட்டிருக்கும் அரபுக்கள் சிலர், தங்களுக்கு மாதவாடகை இஸ்லாமிய காலண்டர் அடிப்படையில்தான் தரவேண்டும் என்று அடம் பிடிப்பார்களாம். மூன்று வருடத்திற்கு ஒரு மாதம் போனஸாக கிடைக்கிறதே!