Saturday, February 09, 2019

அறியாமைக் காலத்தின் மீள் வரவு!

லகளவில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் பெருமளவில் குறைந்து வருகிறது என்ற அதிர்ச்சித் தகவலைத் தெரிவிக்கின்றன அண்மைய புள்ளிவிபரங்கள். இதில் சர்வதேச அளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. முதலிடத்தில் இருக்கும் சீனாவில் 1௦௦ ஆண் குழந்தைகளுக்கு 87 பெண் குழந்தைகள். இந்தியாவில் 1௦௦ ஆண் குழந்தைகளுக்கு 89 பெண் குழந்தைகள்.

இந்தச் சரிவு விகிதப் பட்டியலில் இந்திய அளவில் முன்னணியில் இருப்பது தென்னிந்திய மாநிலங்களே என்பது இன்னொரு அதிர்ச்சி! 2௦௦7-க்கும் 2௦16-க்கும் இடைப்பட்ட பத்தாண்டுகளில் இந்தச் சரிவு விகிதம் உச்சத்தை எட்டியிருக்கிறது. முதலிடத்தில் ஆந்திரா (1௦௦௦-த்திற்கு 168 குறைவு) இரண்டாமிடத்தில் கர்நாடகா (1௦8 குறைவு) மூன்றாமிடத்தில் தமிழ் நாடு (95 குறைவு).

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி, “மனிதகுல ஆண் / பெண் பிறப்பு விகிதம் சிறிதளவு ஆணினம் பக்கம் சாய்ந்ததாகவே இருக்கிறது. இயற்கையான பிறப்பு விகிதம் 105 என்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அதன் பொருள் ஒவ்வொரு 100 பெண் குழந்தைகளுக்கும் 105 ஆண் குழந்தைகள் பிறக்கிறார்கள் என்பதாகும்.

பிறப்பு விகிதத்தில் ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் விபத்து, வன்முறை, போர் போன்ற புறக்காரணிகளால் இள வயதில் இறக்கும் ஆண்களில் எண்ணிக்கையும் பெண்களைவிட அதிகமாக இருப்பதால் இயற்கையிலேயே ஒருவித சமநிலை ஏற்பட்டு விடுகிறது. இந்தச் சமநிலை விகிதம் அந்நாட்டின் மொத்த ஜனத்தொகை விகிதத்தில் பிரதிபலிக்க வேண்டும். அதாவது, மொத்த ஜனத்தொகையில் ஆண்-பெண் விகிதாசாரம் 105 ஆகவோ அல்லது அதற்கும் குறைவாகவோ இருக்க வேண்டும்.

எந்த ஒரு நாட்டில் இந்த விகிதாசாரம் 105-க்கும் மிக அதிகமாக இருக்கிறதென்றால், அதாவது பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகள் அதிகமாக இருக்கிறார்கள் என்றால், அந்தச் சமூகத்தின் குழந்தை பிறப்பு விகிதத்தில் மனிதத் தலையீடு இருப்பதாகவே பொருள். அதாவது, கருக்கலைப்பு, சிசுக்கொலை ஆகியவற்றின் மூலமாக பெண் குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கையை அச்சமூகம் மட்டுப்படுத்துகிறது என்று கருத வாய்ப்பு உண்டு.

இதே போன்றதொரு அறிக்கையை உலக வங்கியும் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கைப்படி இந்தியாவின் பிறப்பு விகிதம் 1962-ல் 106-ஆக இருந்தது. அதாவது இயற்கையான பிறப்பு விகிதமான 105-ஐ விட கொஞ்சம்தான் அதிகம். ஆனால் இந்த விகிதம் கிடுகிடுவென அதிகரித்து 2017-ல் 111 ஆனது. சீனாவிலும் இதே காலகட்டத்தில் 107 ஆக இருந்த பிறப்பு விகிதம் 115 ஆக அதிகரித்துள்ளது.

யூனிசெஃப் நிறுவனம் வெளியிட்ட கட்டுரை ஒன்றில் இந்தியப் பிறப்பு விகிதத்தில் ஏற்படும் இத்தகைய சரிவு, கவலைக்குரியது என்று தெரிவித்துள்ளது.

சர்வதேச நிறுவனங்கள் வெளியிட்டுள்ள இப் புள்ளிவிவரங்களை இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கைகளும் உறுதிப்படுத்துகின்றன.

உலகிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடுகளான சீனாவிலும் இந்தியாவிலும் தான் இத்தகைய சமநிலையற்ற விகிதாச்சார்ரம் நிலவுகிறது. இந்த இரண்டு நாடுகளுமே மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதற்காகக் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைத் தீவிரமாக அமுல் படுத்தியவை.

இந்த விகிதாச்சாரக் குறைவினால் என்ன பாதிப்பு ஏற்படும்?

திருமணமாகாத ஆண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மக்கள் தொகைப் பெருக்கத்தில் தேக்க நிலை ஏற்படும். ஆண் – பெண் விகிதாச்சாரம் மேலும் மோசமான நிலையை எட்டும். பாலியல் ரீதியிலான குற்றங்கள் அதிகரிக்கும்.

வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்திற்கு முந்தைய அரபுக்களிடையே பெண் குழந்தைகளை வெறுக்கும் தன்மை இருந்ததைத் தெரிந்துகொள்ளலாம். தன்னுடைய பெண் குழந்தையை உயிரோடு மண்ணில் புதைக்கக்கூட காட்டுமிராண்டிகளான அன்றைய அரபு மக்கள் தயங்கவில்லை. அப்படி இருந்தவர்களை இஸ்லாம் முற்றாகத் திருத்தி, பெண் மக்களைக் கொண்டாடுபவர்களாக மாற்றியது.

இன்றைய புள்ளிவிபரங்களைப் பார்த்தால் அன்றையை காட்டுமிராண்டி கலாச்சாரம் மீண்டும் திரும்புகிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது!

தொடர்புடைய சுட்டிகள்:
https://economictimes.indiatimes.com/blogs/et-editorials/worrying-sex-ratio-trends-among-states/
http://www.searo.who.int/entity/health_situation_trends/data/chi/sex-ratio/en/
https://data.worldbank.org/indicator/SP.POP.BRTH.MF
http://www.unicef.in/Story/1129/Declining-sex-ratios-a-matter-of-concern
http://www.census2011.co.in/sexratio.php

 நன்றி: சத்தியமார்க்கம்.காம்

Thursday, February 07, 2019

முன்மாதிரி வணிகர்!

பித்தோழர்களில் பெரும்பாலானோர் வணிகர்களாக இருந்தனர். குறிப்பாக மக்காவிலிருந்து புலம் பெயர்ந்து மதீனாவுக்கு வந்த முஹாஜிர் தோழர்கள். அதற்கு இரண்டு முக்கியமான காரணங்களைக் குறிப்பிடலாம். ஒன்று, மக்காவைச் சுற்றியுள்ள கரடுமுரடான நிலப்பரப்பு விவசாயம் செய்ய ஏற்றதாக இல்லை. இரண்டு, நபி இஸ்மாயில் (அலை) அவர்களின் காலத்திலிருந்தே வணிகக் கூட்டங்கள் தங்கிச் செல்லும் இடமாக இருந்த மக்கா பிற்காலத்தில் ஒரு முக்கிய வணிக மையமாகவும் ஆனது. மக்காவிலிருந்து புறப்பட்ட வணிகக் கூட்டங்கள் ஷாம், சிரியா, நஜ்ரான் போன்ற பிரதேசங்களுக்குச் சென்று வணிகம் செய்து பொருளீட்டித் திரும்பின. நபி (ஸல்) அவர்களே வணிகப் பெருமாட்டி கதீஜாப் பிராட்டியாரின் (ரலி) வணிகக் கூட்டத்தை வழி நடத்திச் சென்று பெரும் பொருளீட்டித் திரும்பியிருக்கிறார்கள் என்பது இஸ்லாத்தின் மீளெழுச்சிக்கு முந்தைய வரலாறு.

இதெல்லாம் இருந்தும் பிற்காலத்தில் நபித்தோழர்களில் வணிகர் என்றாலே முதலில் நினைவுக்கு வரும் பெயர் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி). எல்லா முஹாஜிர் தோழர்களைப் போலவே தம் செல்வங்களையெல்லாம் மக்காவிலேயே விட்டுவிட்டு வெறுங்கையுடன் ஓர் அகதியாக மதீனாவுக்கு வந்த அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களை மதீனாவாசியான ஸஅத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்களுக்கு, உடன் பிறவா சகோதரராக அறிவித்தார்கள் நபி (ஸல்).

பெருந்தன்மையான மனத்தின் சொந்தக்காரர் ஸஅத், தம் சொத்துகள் அனைத்திலும் சரிபாதியைத் தம் புதிய சகோதரருக்குப் பங்கிட்டுக் கொடுக்க முன் வந்தார். அவற்றை ஏற்க மறுத்த அப்துர் ரஹ்மான் (ரலி) “எனக்கு, சந்தையைக் காட்டுங்கள்” என்று சொன்ன தன்னம்பிக்கை வார்த்தைகள் நபித்தோழர்களின் வரலாற்றில் தனியிடம் பெற்றவை. வாழ்வாதாரம் அளிப்பவன் இறைவன் என்ற பேருண்மையின் வெளிப்பாடாய் அமைந்த வார்த்தைகள் அவை.

அவருடைய உழைப்புக்கேற்ற உயர்வை வழங்கினான் இறைவன். தாம் பெருஞ்செல்வப் பேறுகளைப் பெற்றுள்ளதைப் பற்றிப் பின்னொரு சமயத்தில் மக்களிடம் பேசும்போது அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) சொன்ன விளக்கங்களில் ஒன்று இறை நம்பிக்கையுள்ள வணிகர்களுக்கு சிறந்ததொரு பாடமாக உள்ளது. அவர் சொன்னார்:

நான் குறைந்த ஆதாயத்தை (லாபத்தை)க் கூட அலட்சியப்படுத்தியதில்லை.
என்னிடம் விலை கேட்கப்பட்ட எந்தப் பொருளையும் விற்பனை செய்வதில் வீணாகக் காலம் தாழ்த்தியதில்லை.
நான் தவணை முறையில் விலையைப் பெற்றுக்கொள்ளும் விதத்தில் விற்பனை செய்வதில்லை.
இந்த மூன்று காரணங்களையும்கூட நான் என் முன்னேற்றத்திற்கான அடிப்படைகளாகக் கருதுகிறேன்”

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களின் வாழ்க்கையைப் பற்றி ‘முன்மாதிரி வணிகர் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி)‘ என்ற தலைப்பில் ஏம்பல் தஜம்முல் முகம்மது அவர்களும் கே.தாஜுத்தீன் அவர்களும் இணைந்து ஒரு நூல் எழுதியிருக்கிறார்கள். இஸ்லாமிக் ஃபவுண்டேஷன் டிரஸ்ட் வெளியீடான இந்த நூல் அநேகமாக அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களை பற்றி இதுவரை தமிழில் வெளியான ஒரே நூலாக இருக்கும் என்று நினைக்கிறேன். படிப்பதற்கு ஆர்வத்தைத் தூண்டும் வகையில் எளிய மொழி நடையில் அத்தோழரின் முழு வாழ்க்கை வரலாறும் விவரித்துச் சொல்லப்பட்டிருக்கிறது.

நூல்: முன்மாதிரி வணிகர் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி)
நூலாசிரியர்கள்: ஏம்பல் தஜம்முல் முகம்மது / கே. தாஜுத்தீன்
பதிப்பகம்: இஸ்லாமிக் ஃபவுண்டேஷன் டிரஸ்ட்

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

Tuesday, January 22, 2019

அழைப்பு

Ubudiah Masjid, Perak, Malaysia
மாம் சாஹிப் மக்ரிப் தொழுகை முடிந்து வீட்டிற்கு வரும்போது அவருடைய கைபேசி ஒலித்தது. யாரோ புது எண், மலேஷியாவிலிருந்து அழைக்கிறார்கள்.

“அஸ்ஸலாமு அலைக்கும்”

‘வ அலைக்குமுஸ் ஸலாம் உஸ்தாத். நான் மலேஷியாவிலிருந்து யூனுஸ் பேசுறேன். என்னை ஞாபகம் இருக்கா?”

எந்த யூனுஸ்? என்று கேட்க எத்தனித்தபோதே அவருக்கு ஞாபகம் வந்து விட்டது. “அட..தம்பி யூனுஸ்.! எப்படி இருக்கீங்க?”

“நான் நல்லா இருக்கேன் உஸ்தாத். அல்ஹம்துலில்லாஹ். நீங்க எப்படி இருக்கீங்க?”

“நானும் நல்லா இருக்கேன், அல்ஹம்துலில்லாஹ்!”

“உஸ்தாத், நீங்க மலேஷியாவிலிருந்து போன பிறகு உங்களைத் தொடர்பு கொள்ளப் பல தடவை முயற்சி செய்தேன். உங்க நம்பர் கிடைக்கலை. சமீபத்துல உங்க நண்பர் இஸ்மாயிலைப் பார்த்தேன். அவர் கிட்டதான் உங்க நம்பர் வாங்கி பேசுறேன். இன்ஷாஅல்லாஹ் அடுத்த வாரம் நான் உம்ரா போக இருக்கேன். எனக்காக துஆ செய்யுங்க உஸ்தாத்.”
“மாஷா அல்லாஹ். கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. அல்லாஹ் உங்கள் பயணத்தை எளிதாக்கி உங்கள் உம்ராவை ஏற்று அருள் புரிவானாக”

“அல்ஹம்துலில்லாஹ். எனக்கு இந்த வாய்ப்பை அளித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். நீங்கள் எனக்குச் செய்த உதவியையும் நான் மறக்க மாட்டேன்.” நாத் தழுதழுக்கச் சொன்னார் யூனுஸ்.

oOo

ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது அது. அப்போது இமாம் சாஹிப் மலேஷியாவில் உள்ள ஒரு பள்ளிவாசலில் இமாமாக இருந்தார். மாலை வேளை அஸ்ருத் தொழுகை முடிந்ததும் காலாற நடப்பதும் அப்பகுதி மக்களிடம் அளவளாவுதலும் இமாம் சாஹிபின் வழக்கமாக இருந்தது. அன்று ஏனோ நடப்பதற்கு மனமில்லை. பள்ளி வாசலுக்கு அருகிலேயே ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். அப்போது பள்ளியைக் கடந்து சென்ற ஒரு வாலிபர் சற்றே தயங்கி நின்றார். அவரது ஆடையில், நெற்றியில், கழுத்தில் தொங்கிய மாலையில் அவரது மத நம்பிக்கையின் அடையாளங்கள் பளிச்சென்று தெரிந்தன. ஏதோ ஓர் எதிர்பார்ப்பு அவருடைய கண்களில் தெரிந்தது.

தயங்கி நின்ற அவரை “தம்பி.. உள்ளே வாங்க” என்று அழைத்தார் இமாம் சாஹிப். உள்ளே வந்தவர் இன்னும் தயங்கியவாறே “நானெல்லாம் இங்கே உள்ளே வரலாமா?” என்று கேட்டார். “தாராளமா வரலாம். தயக்கமே வேண்டாம். இப்படி உட்காருங்க.” என்று அருகிலிருந்த இருக்கையைச் சுட்டினார் இமாம்.

அந்த இருக்கையில் அமர்ந்த அந்த வாலிபர் சற்று உணர்ச்சி வசப்பட்டவராக இருந்தார். ஏதோ கேட்க விரும்பியதைப் போலத் தெரிந்தது. ஆனால் பேச நா எழவில்லை. திடீரென கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தோட தேம்பி அழ ஆரம்பித்தார் அவர்.

அவர் முதுகில் தடவிக் கொடுத்து ஆசுவாசப் படுத்திய இமாம், அவரே பேசட்டும் என்று காத்திருந்தார். கொஞ்ச நேரம் ஆனதும் தன் அழுகையைக் கட்டுப் படுத்திக் கொண்ட அந்த வாலிபர் சொன்னார், “நான் எத்தனையோ முறை இந்த மசூதியைக் கடந்து போயிருக்கேன். அப்பல்லாம் எனக்கு எதுவும் தோன்றியதில்லை. ஆனா இன்னிக்கு இந்த வாசலைத் தாண்டுரப்போ இது உள்ளே போகணும்னு தோணுச்சு. அதுக்கு ஏத்த மாதிரி நீங்களும் என்னை உள்ளே கூப்பிட்டீங்க. உள்ள வந்ததும் இனம் புரியாத ஒரு உணர்வு ஏற்பட்டுச்சு. ஒரு விதமான வைப்ரேஷன் அது. என்னைக் கட்டுப்படுத்திக்க முடியாம அழுகை வந்துச்சு” என்றவர் சற்று நிதானித்தவராக “நான் உங்களை ஒன்னு கேக்கலாமா?” என்றார்.

“தராளமா கேளுங்க தம்பி”

“நான் உங்க மதத்துல சேரனும். அதுக்கு நான் என்ன செய்யணும்?”

‘சட்’டென்று வந்த அந்தக் கேள்வியை எதிர்பார்க்காத இமாம் சற்றே திகைப்படைந்தார்.

“அது மிக எளிதானதுதான் தம்பி. நம்மைப் படைத்த இறைவன் அல்லாஹ் ஒருவனே என்பதும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறுதி இறைத்தூதர் என்பதும்தான் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை. இந்த இரண்டையும் மனதார நம்பி, வாயால் மொழிந்தாலே நீங்கள் முஸ்லிம் ஆகி விடுவீர்கள்.”
“அப்படின்னா எனக்கு இப்பவே அதைச் சொல்லித் தர முடியுமா?”

“இன்றிலிருந்து நீங்கள் ஒரு புது வாழ்வைத் துவங்கப் போகிறீர்கள். இந்தத் துவக்கம் உங்களுக்கு இனிதாக அமையட்டும். நன்றாக குளித்துச் சுத்தம் செய்து கொண்டு வாருங்கள்”

‘ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்தில் கேட்டு விட்டார், வீட்டிற்குப் போய் ஆற அமர யோசித்தார் என்றால் மனம் மாறவும் வாய்ப்பிருக்கிறது’ என்று இமாம் எண்ணிக் கொண்டார்.

ஆனால் சுமார் ஒரு மணி நேரம் கழித்து குளித்து, தூய்மையான ஆடை அணிந்தவராக அந்த வாலிபர் திரும்பி வந்து விட்டார். இமாம் சொல்லித்தந்த ஷஹாதத் கலிமா எனும் உறுதிமொழியை உளமார ஏற்று இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.

“உங்களுக்கு விருப்பமான இஸ்லாமியப் பெயர் எதுவும் இருக்கிறதா?” என்று அந்த வாலிபரிடம் கேட்டார் இமாம்.

“அப்படி எதுவும் இல்லை. உங்கள் பெயர் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா?”

“என் பெயர் யூனுஸ். இது இறைத்தூதர் ஒருவரின் பெயர்”

“அந்தப் பெயரையே எனக்கும் சூட்டி விடுங்கள்” என்று கேட்டுக் கொண்டார் அந்த வாலிபர்.

وَاللّٰهُ يَهْدِىْ مَنْ يَّشَآءُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏

இவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகின்றான்.” 2:213

அந்த அளவற்ற அருளாளனின் கருணையை நினைவு கூர்ந்தவராக தன் வீட்டை நோக்கி நடந்தார் இமாம் யூனுஸ்.

oOo

(இதுவொரு சிறுகதை அல்ல; உண்மை நிகழ்வொன்றின் சுருக்கம்)சத்தியமார்க்கம்.காம்   தளத்தில் வெளியானது