Sunday, May 01, 2005

நூல் விமர்சனம்

நூல் பெயர்: அடுத்த விநாடி
ஆசிரியர்: நாகூர் ரூமி

இந்த நூலை ஒவ்வொருவரும்(மனிதனும் அல்லது தமிழ் படிக்க தெரிந்த எவரும்) படித்தே ஆக வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.

திருக்குரானில் ஒரு வசனம் வரும், 'மனிதர்கள் தங்களுக்கு தாங்களே தீங்கிழைத்து கொள்கிறார்கள்' என்று- எவ்வளவு உண்மை. அதாவது வாழ்க்கையில் ஒருவனுக்கு ஏற்படும் கஷ்டங்களுக்கு அவனே பொறுப்பாளி. ஏனெனில் இறைவன் வாழ்க்கையை மிகவும் எளிதாக்கி வைத்திருக்கிறான். வெற்றியின் இரகசியங்கள் இந்த நூலை படித்தால் உண்மை புரிந்து விடும் இறைமொழியின் அர்த்தங்கள் விளங்கி விடும்.

நாம் குறைந்த சக்தியை செலவு பண்ணி சிரிப்பதை விட அநியாயமாக அதிக சக்தி செலவு செய்து அழுது கொண்டிருக்கிறோம். இந்த புஸ்தகத்தை படித்தவர்கள் அழுவதை நிறுத்த தொடங்கி விடுவார்கள் என்பது உறுதி.

வியாபாரம் சரியில்லை என்று கடையை இழுத்து மூடுவதை கேள்விப் பட்டிருக்கிறேன். கூட்டம் சேரவில்லை என்று சினிமா கொட்டகைகள் மூடப்படுவதை படித்தும் இருக்கிறேன். ஆனால் என் ஆசை திருடர்களே இல்லை என்று சிறைச்சாலையை மூட வேண்டும் என்பது தான்.

ஊரில் நூலகம் ஒன்று திறந்தால் சிறைச்சாலையை மூடிவிடலாம் என்று மூத்தவர் மொழி ஒன்று உள்ளது. ஆனால் இந்த நூல் ஒன்றை திறந்தாலே சிறைச்சாலைகளை இழுத்து பெரிய திண்டுக்கல் பூட்டா வாங்கி போட்டு பூட்டிவிடலாம் என்பது அடியேனது மொழி.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் திருடுகிறவனுக்கு ஈமான்(இறை நம்பிக்கை) கிடையாது என்று. அதாவது ஈமான் உள்ளவன் திருட மாட்டான் என்று பொருள்.

திருடன் ஏன் அடுத்தவர் பொருள் மீது கையை வைக்கிறான். அவனுக்கு நேர்மையாக வாழ வழி இல்லையா? அல்லது அப்படி வாழ வழி தெரிய வில்லையா? என்னைக் கேட்டாலும் கேட்காவிட்டாலும் வாழ வழி தெரியாமல் என்று தான் சொல்வேன்.

இந்த நூல் வாழ்க்கைக்கு நல்ல வழிகாட்டி..அனைவரும் படிக்க வேண்டும் குறைந்த பட்சம் ஒரு வாட்டி. மற்றதை இந்த நூலே பார்த்துக் கொள்ளும் இதற்கு நான் கியாரண்டி.

இந்த நூல் மதினா வாசிகளை போல் நம்மை கையை பிடித்து கொள்கிறது. எங்கே என்று கேட்கிறீர்களா? வேறு எங்கே? வெற்றியின் வாசலிற்கு தான்..

அல்லாஹ் எதையும் படைக்க நாடிய போது 'குன்'(ஆகுக) என்று சொன்னான் உடனே அது ஆகி விட்டது. அல்லாஹ்வின் நேரடி பிரதிநிதியான மனிதன் அதற்கு ஏற்றாற் போல் வாழ வேண்டும்..

இந்த புஸ்தகத்தை படித்தவர்களால் எதுவும் 'தெரியல' என்று சொல்ல முடியாது. இந்த புஸ்தகத்தை ஒழுங்காக பயிற்சியை மேற்கொண்டால் 'முடியல' என்றும் கூற முடியாது.

துவா
ஸலாம
அ.முஹம்மது இஸ்மாயில்