Tuesday, October 07, 2008

பழி தீர்த்தலும் மன்னித்தலும்!

சகோதரர் கோவி.கண்ணனின் 'இறைவன் படைக்கிறானா?' பதிவின் பின்னூட்டத்தில் திரு. தருமி இஸ்லாம் தொடர்பான சில கேள்விகளை கேட்டிருந்தார். அவரது சந்தேகங்களுக்கான பதில்களை எனக்குத் தெரிந்த அளவில் இங்கு தருகிறேன்.

முதலில் ஒரு விஷயத்தை தெளிவு படுத்தி விடுவது நல்லது என்று நினைக்கிறேன். ஒரு கருத்துப் பரிமாற்றமாக மட்டுமே நான் இதில் பங்கு பெறுகிறேனே தவிர விவாதமாக அல்ல. விவாதங்களினால் எந்த ஆக்கபூர்வமான விளைவுகளும் ஏற்படப் போவதில்லை என்பது எனது தாழ்மையான கருத்து!

தருமி அவர்களின் கேள்வி 1:

//அக்கிரமத்திற்கு எதிராக பழிதீர்ப்பது அனுமதிக்கப் பட்டிருந்தாலும் மன்னித்து விடுவதே சிறந்தது என்று குர்ஆன் சொல்கிறது://


இந்த வாக்கியத்தின் முதல் பகுதியைத் தான் நான் கேள்விக்குட்படுத்துகிறேன். எந்த ஒரு மதத்திலும் பழிதீர்ப்பதையோ, கொலை செய்வதையோ நியாயப்படுத்துதல் என்பதை ஒத்துக்கொள்ள முடியவில்லை.


//இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையே யாகும்;//


இன்னா செய்தாரையும் ஒறுத்தல் பற்றிப் பேசினால்தானே அது நல்வழிப்படுத்தும் வழியாக இருக்க முடியும். பழிக்குப் பழி என்று போதிப்பதை எப்படி ஒத்துக்கொள்ள முடியும்?


//அவர்களுக்கு அக்கிரமம் செய்யப்பட்டால் (அதற்கு எதிராக நீதியாகத் தக்க முறையில்) பழி தீர்ப்பார்கள். (42:39)


எவரொருவர் அநியாயம் செய்யப்பட்டபின், (அதற்கு எதிராக நீதியாக) பழி தீர்த்துக் கொள்கிறாரோ, அ(த்தகைய)வர் மீது (குற்றம் சுமத்த) யாதொரு வழியுமில்லை. (42:41)//


மேற்கண்ட இரு வாசகங்களும் தனிமனித நீதிபற்றிதான் கூறுகிறதாகத் தெரிகிறதேயொழிய நீங்கள் கீழ்க்கண்டவாறு சொல்வதுபோல்- //குழப்பம் விளைவிப்பவனையும், கொலைக்குப் பழியாகவும் தவிர்த்து கொலை செய்யாதே என்பது இஸ்லாமிய அரசாங்கங்களுக்கான கட்டளை.// அரசாங்களுக்கு உரிய கட்டளைகளாகத் தெரியவில்லையே ..

பழிதீர்ப்பதும் கொலை செய்வதும்:

நல்லறிவாளர்களே! கொலைக்குப் பழி தீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு. (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம். (குர்ஆன் 2:179)

பழி தீர்ப்பது அனுமதிக்கப் பட்டிருப்பதன் நோக்கம், 'நாம் பழி தீர்க்கப் பட்டு விடுவோம்' என்ற அச்சத்தினால் குற்றமிழைக்க நினைப்பவர்களும் அதை விட்டு தவிர்ந்து கொள்ள வேண்டும் என்பதால்தான். அப்படி இல்லாமல், என்ன குற்றம் புரிந்தாலும் நாம் மன்னிக்கப் பட்டு விடுவோம் என்ற நிலை இருந்தால், அது குற்றங்கள் மேலும் பெருக வழி வகுக்குமேயல்லாது குறைக்காது.

இன்னா செய்தாரை ஒறுத்தல்:

எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால், நிச்சயமாக, அது மிக்க உறுதியான (வீரமுள்ள) செயலாகும். (42:43)

அக்கிரமம் இழைக்கப்பட்ட ஒரு நபர் பழிதீர்த்துக் கொள்ள அனுமதி அளிக்கப் பட்டிருக்கிறதேயொழிய இது கட்டளையோ போதனையோ அல்ல. அப்படி அனுமதிக்கப் பட்டிருப்பதுகூட குற்றச் செயல்கள் பெருகாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். மாறாக, பழிதீர்ப்பதை விட குற்றவாளியை மன்னிப்பதன் மூலம் இன்னா செய்தாரை ஒறுப்பதே உறுதியான வீரமுள்ள செயல் என்று போதிக்கிறது இஸ்லாம். அனுமதி, போதனை இவ்விரண்டிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொண்டால் இதையும் புரிந்து கொள்ளலாம்.

தனிமனித நீதியும் அரசாங்கங்களுக்கான கட்டளையும்:

அவர்களுக்கு அக்கிரமம் செய்யப்பட்டால் (அதற்கு எதிராக நீதியாகத் தக்க முறையில்) பழி தீர்ப்பார்கள். (42:39)

எவரொருவர் அநியாயம் செய்யப்பட்டபின், (அதற்கு எதிராக நீதியாக) பழி தீர்த்துக் கொள்கிறாரோ, அ(த்தகைய)வர் மீது (குற்றம் சுமத்த) யாதொரு வழியுமில்லை. (42:41)

அநீதி இழைக்கப் பட்டவருக்குத்தானே இந்தச் சலுகை? அவர் மீது அநீதி இழைக்கப் பட்டிருக்கிறது என்று யார் முடிவு செய்வது? அநீதி இழைத்தவர் செல்வாக்கு மிக்க பலசாலி என்றால், பாதிக்கப்பட்ட எளியவர் எப்படி அவரை பழி தீர்ப்பார்? அநியாயமாக கொல்லப்பட்ட ஒருவருக்காக பழிதீர்க்க யாரும் இல்லை என்றால், கொலை செய்தவர் தண்டனையின்றி தப்பிவிட முடியுமா? தனக்குப் பிடிக்காத ஒரு நபரை ஒருவர் பழி தீர்த்து விட்டு, 'அவர் எனக்கு அநீதி இழைத்ததால்தான் நான் அப்படிச் செய்தேன்' என்று பொய் சொல்லி தப்பிக்க முடியுமா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் என்ன என்று யோசித்தாலே, பாதிக்கப் பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுத்தர, குற்றங்களுக்குத் தண்டனை வழங்க, ஒரு அரசாங்க அமைப்பு அவசியம் என்பது தெளிவாகும். குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவது அரசின் கடமைதானே தவிர தனிநபர்களின் பொறுப்பு அல்ல.

மற்ற கேள்விகளையும் அடுத்தடுத்த பதிவுகளில் தொடர்கிறேன்..

Tuesday, April 01, 2008

இரும்பு மனிதர் மிட்டல்!

Forbes பத்திரிக்கையின் சமீபத்திய கணக்கெடுப்பின்படி உலகின் ஆகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்ஸுக்கு அடுத்ததாக நான்காம் இடத்தில் இருப்பவர் லக்ஷ்மி மிட்டல். இங்கிலாந்தில் வசிக்கும் பணக்காரர்களின் பட்டியலில் 2005-லிருந்து முதலிடத்தை பெற்றிருப்பவரும் இவர்தான். இவரது நிறுவனமான Arcelor Mittal உலக இரும்பு உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. மிட்டல் இந்நிலையை அடைந்தது மிகக் குறுகிய காலத்தில்தான்.

கிடைக்கும் வாய்ப்புகளை திறமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் சாதுரியம், துணிச்சலான முடிவுகள், நட்டத்தில் நடந்துக் கொண்டிருக்கும் நிறுவனங்களை லாபகரமானதாக மாற்றும் திறமை; இவையே அவரது வெற்றியின் ரகசியங்கள் என்று சொல்லப்படுகிறது.

முதன் முதலாக மிட்டலின் பெயர் ஊடகங்களில் பரபரப்பாக அடிபட்டது 2002-ல். அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் டோனி ப்ளேர் ருமேனிய அரசாங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதினார். ருமேனிய அரசிற்கு சொந்தமான இரும்பு ஆலை ஒன்றை மிட்டலுக்கு விற்பதை ஆதரித்து அக்கடிதம் எழுதப் பட்டிருந்தது. அதற்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் மிட்டல் டோனி ப்ளேரின் கட்சி வளர்ச்சி நிதிக்கு 125,000 பவுண்டுகள் நன்கொடை அளித்திருந்தார். பிரிட்டிஷ் குடிமகனாகக் கூட இல்லாத ஒருவருக்காக பிரிட்டிஷ் பிரதமர் பரிந்து பேசுவது ஏன் என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின. இருப்பினும் 'தான் செய்ததில் தவறு ஒன்றுமில்லை' என ப்ளேர் சமாளித்து விட்டார்.

மிட்டலின் குடும்பத்தினர் ஏற்கனவே இந்தியாவில் இரும்புத் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள்தான். அதே துறையில் செல்வாக்கு மிக்கவையாக விளங்கிய இந்திய அரசு நிறுவனங்கள் மற்றும் டாடா போன்ற மெகா நிறுவனங்களுடன் போட்டியிட்டு தனது நிறுவனத்தை வளர்ப்பது மிக சிரமமான காரியம் என்று உணர்ந்த மிட்டலின் தந்தை தனது 25 வயது மகன் இந்தோனேஷியாவில் ஒரு இரும்பு ஆலை அமைக்க உதவினார். இளைய மிட்டலின் மேற்பார்வையினால் அந்த ஆலை வெற்றிகரமாக நடக்கத் தொடங்கியது. முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளும் மிட்டல் வீட்டுக் கதவை தேடி வந்து தட்டின!

மிட்டலின் ஆலைக்கு கச்சாப்பொருளை விற்பனை செய்து கொண்டிருந்த டிரினிடாட் அரசிற்குச் சொந்தமான நிறுவனம் ஒன்று மிகச் சிரமதசையில் நடந்து கொண்டிருந்தது. மிட்டலின் வெற்றிகரமான தொழில் முனைப்பைப் பார்த்த டிரினிடாட்காரர்கள், தங்கள் நிறுவனத்தை ஒப்பந்த முறையில் எடுத்து நடத்தும்படி மிட்டலுக்கு அழைப்பு விடுத்தனர். மேனேஜ்மெண்ட் வட்டாரங்களில் இதை turn-around strategy என்பார்கள். மகிழ்ச்சியுடன் அப்பொறுப்பை ஏற்ற மிட்டல் 1994-ல் அந்நிறுவனத்தை விலைக்கு வாங்கிக் கொண்டார்.

கிட்டத்தட்ட அதே சமயத்தில் மெக்ஸிகோ, கனடா மற்றும் ஜெர்மனியில் மூன்று இரும்பு ஆலைகளை மிட்டல் வாங்கினார். நட்டத்தில் நடந்து கொண்டிருந்த இந்நிறுவனங்களை யார் தலையிலாவது கட்டிவிட அந்தந்த நாட்டு அரசுகள் முயன்று கொண்டிருந்தன! ஆனால் மிட்டலின் கண்களுக்கோ அவற்றில் புதைந்திருந்த வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் தெளிவாகத் தெரிந்தன.

90-களின் இறுதியில், அமெரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் மிட்டல் கால் பதித்திருந்தார். 2006-ல் பிரான்ஸின் பழம்பெரும் நிறுவனங்களில் ஒன்றான Arcelor-ஐ மிட்டல் வாங்க முயன்றது அங்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலவித எதிர்ப்புகளையும் சமாளித்துத்தான் மிட்டல் Arcelor-ஐ கைப்பற்றினார்.

இன்று சீனாவில் மிட்டலுக்குச் சொந்தமாக ஒரு ஆலை இருக்கிறது. இன்னொன்றில் பங்குதாரராக இருக்கிறார்.

Arcelor Mittal நிறுவனத்தின் ஊக்க வாசகம் (Motto), 'துணிவு எல்லாவற்றையும் மாற்றிவிடும்!' (Boldness Changes Everything!)என்கிறது. இந்நிறுவனம் கடந்து வந்த பாதைகளையும், அவர்களின் சாதனைகளையும் பார்க்கும்போது இவை வெறும் வார்த்தைகளல்ல என்பது புரிகிறது.

Monday, March 31, 2008

ரவி காந்த் சர்மா என்கிற 'இந்தியாவின் சொத்து'!

டெல்லி பத்திரிகையாளர் ஷிவானி படுகொலை வழக்கில், ஐ.ஜியான ரவிகாந்த் சர்மா குற்றவாளி என வந்துள்ள தீர்ப்பு சில சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

நீதிமன்றத்தால் 'குற்றவாளி' என தீர்ப்பளிக்கப்பட்ட முதல் ஐ.பி.எஸ் அதிகாரி என்ற பெருமையைப் பெறுகிறார் ரவிகாந்த் சர்மா.

தகாத உறவு, கூலிப் படைத் தொடர்பு, தலைமறைவு என அடுக்கடுக்கான கறைகளைச் சுமந்திருக்கிறார் ரவிகாந்த் சர்மா. அதோடு, தன் மனைவியை ஏவிவிட்டு, முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் மீதே அவதூறு கிளப்பி, அந்தக் களேபரங்களுக்கிடையில் புகுந்து தப்பிக்கப் பார்த்ததன்மூலம், புதியதோர் குற்றவியல் 'அத்தியாயமே' படைத்துவிட்டார்!

ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர் காவல் துறையின் உயரதிகாரி என்பதற்காக சலுகை காட்டாமல், அரசியல்ரீதியான தந்திரங்களுக்குபம் பணிந்துவிடாமல், கடமையே கண்ணாகச் செயல்பட்டு அவருக்குத் தண்டனை பெற்றுத் தந்திருக்கின்றனர் விசாரணை அதிகாரிகள். இதன் மூலம் காவல் துறையின் பெருமை மிக்க இன்னொரு பக்கத்தை உலகுக்கு உணர்த்தியிருக்கிறார்கள் இவர்கள்!

ஆனால், சர்ச்சை வேறு இடத்திலிருந்து புறப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி சாஸ்திரி தேவையில்லாத ஒரு விவாதத்திற்கு அடிபோட்டிருக்கிறார். இந்தக் குற்றத்தை மட்டும் தவிர்த்து விட்டுப் பார்த்தால் சர்மா இந்த நாட்டின் ஒரு சொத்து என தீர்ப்பிலேயே குறிப்பிட்டிருக்கும் அவர் இந்தக் காரணத்தினாலேயே சர்மாவுக்கு மரண தண்டனை விதிக்காமல் குறைந்த பட்ச தண்டனையான ஆயுள் தண்டனை விதித்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய பொறுப்புடைய ஒரு உயரதிகாரியே திட்டமிட்டு ஒரு கொலை செய்கிறார் என்றால், அவருக்கு அதிக பட்ச தண்டனை விதிப்பதா? குறைந்த பட்ச தண்டனை விதிப்பதா? இந்த தீர்ப்பு ஒரு தவறான முன்னுதாரணமாகி விடாதா?

ஹாங்காங்கிலிருந்து செயல்படும் ஆசிய மனித உரிமைக் கழகம் இத்தீர்ப்புப் பற்றி ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையின் கடைசிப் பத்தி இப்படிச் சொல்கிறது:

"ஒரு தாயை திட்டமிட்டு கொலை செய்தவர் என நிரூபணமான ஒரு கொலைகார காவல்துறை அதிகாரி நாட்டின் சொத்தாக இருக்க முடியாது. மாறாக ஒட்டு மொத்த இந்திய காவல்துறைக்கே ஒரு களங்கம். இப்படிப்பட்ட ஒரு நபரை புகழும் ஒரு நீதிபதி பாரபட்சமில்லாதவராக இருக்க முடியாது. மாறாக நீதித்துறையின் மீதே சந்தேக நிழலை இவர் படரச் செய்கிறார்".

நன்றி: ஆனந்த விகடன் 02-04-08