Tuesday, December 20, 2005

துள்ளி எழுந்தது நாகப்பட்டினம்!

எனது முதல் பதிவில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்:

"அணுகுண்டு தாக்குதலுக்கு பிறகு இரு ஜப்பானிய நகரங்கள் புத்துயிர் பெற்று எழவில்லையா? அது போல் நாகப்பட்டினமும் வீறு கொண்டு எழ வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம். "

இனி ஜூனியர் விகடன் 21-12-05 இதழில் வெளிவந்திருக்கும் ஸ்பெஷல் ஸ்டோரியிலிருந்து சில பகுதிகள்: (நன்றி ஜூனியர் விகடன்)




இன்றைக்கு ஒருவேளை சுனாமி அரக்கன், தான் விளையாடிய தேசத்தை சுற்றிப் பார்க்க வந்தால், ‘பழிவாங்கிய என்னைப் பார்த்து இப்படி ஒப்பாரி பாடியவர்களா இவர்கள்? கதறலும் உதறலும் உலுக்கிப் போட்டிருந்த என் காலடி விலாசம் எங்கே? நான் வந்துபோன சுவடைக் கூட சுக்குநூறாக்கி எழுந்து நிற்கிறதே இந்தக் கடலோரம்! இனி ஒருபோதும் இந்தப் பக்கம் வரக் கூடாது!' என்றெண்ணி கடலுக்குள்ளேயே முடங்கிப் போவான். அந்தளவுக்கு உலுக்கிப்போட்ட கவலைகளை உப்புக் கருவாடு கணக்காகக் காயப் போட்டுவிட்டு, கடலே கதியென பிழைப்பைப் பார்க்க ஆரம்பித்துவிட்டது நாகப்பட்டினம்.

சுற்றிப்பார்க்க வந்த நமக்கு சுறுசுறுப்பு ஊசி போடும் கணக்காக, அதிகாலை வேளையிலும் குதிகால் அறுந்துபோகிற அளவுக்கு ஓடிஓடி உழைக்கிறார்கள் கடலோர வாசிகள்.

‘‘இதுல ஆச்சர்யப்பட என்ன தம்பி இருக்கு... சுனாமிக்கு முன்னாலகூட நாங்க இந்தளவுக்கு வேர்வைக் கொட்ட வேலை பார்த்தது இல்ல. அந்த சுனாமி வந்தபிறகு, வாழ்க்கையில எதிர்நீச்சல் போடறது எப்படினு நல்லாவே புரிஞ்சுட்டதால மாய்ஞ்சு மாய்ஞ்சு தொழில் பண்றோம். இடிஞ்சு போயிருந்த எங்களுக்கு, படகு தொடங்கி விரிச்சுப்படுக்க பாய் வரைக்கும் எல்லா உதவியும் கிடைச்சுச்சு. இனி மாசம் ஒரு லட்சம்னு ஓசிக்காசு கொடுத்தாலும் ஒரு இடத்துல 'அக்கடா'னு உட்காரத் தோணாது. துண்டை முறுக்கித் தலையில கட்டிக்கிட்டு கடலுல விளைஞ்சு கிடக்குறதை அள்ளிக்கிட்டு வர்றதுதானே நமக்குத் தெரிஞ்ச தொழில். அதை இப்போ அமோகமா செஞ்சுகிட்டு இருக்கோம்" என்று நம்பிக்கைப் பொங்கப் பேசுகிறார்கள், அக்கரைப்பேட்டைக்காரர்கள்.

சுனாமியால் சுவடு அழிக்கப் பட்ட நம்பியார் நகரில் புதிதாகத் தொடங்கப்பட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள், சூறாவளியாக சுழன்று லாபம் பார்த்துக் கொண்டிருக்கின்றன. கீச்சாங்குப்பத்தில் மோட்டார் படகுகள் சீறிக் கிளம்பியபடியே இருகின்றன. அரசு மற்றும் பொதுநல அமைப்புகளின் உதவியோடுதான் இதையெல்லாம் சாதித்திருக்கிறார்கள். எந்த ஏரியாவைச் சுற்றி வந்தாலும், நம்பிக்கைதான் கண்ணில் படுகிறது. அதேசமயம், அரசுத்தரப்பில் பல விஷயங்களில் சுணக்கம் இருப்பதையும் குறிப்பிட்டு, பொருமவும் செய்கிறார்கள் மக்கள்.

மடிந்த உயிர்களுக்கு மரியாதை!
நாகப்பட்டினத்தை துறைமுகமாக்கினால் வியாபார விருத்தியோடு மக்கள் நிரந்தர முன்னேற்றத்தை நோக்கிப் பயணிக்க முடியும் என்பது, கடலால் சூறையாடப்பட்டவர்களின் கண்ணீர்க் கோரிக்கை. ‘‘சுனாமிக்கு முன்னால இருந்தே நாங்க இந்தக் கோரிக்கையச் சொல்றோம். இப்போ ஏன் இதை இன்னும் வலியுறுத்திச் சொல்றோம்னா, நாங்க இழந்த பொருளாதாரம் எக்கச் சக்கம். அதையெல்லாம் திரும்ப ஈட்டுறது மட்டும் எங்க நோக்கமில்லை. இங்கே துறைமுகம் வந்துச்சுனா, மீனுக்கும் இறாலுக்கும் நல்ல ரேட் கிடைக்கும். நாலு வருஷத்துக்கு முன்னால கிலோ நானூறு ரூபாய்னு போன இறால், இப்போ வெறும் இருநூற்றைம்பதுக்குப் போறதே பெரும்பாடா இருக்கு. எங்க உழைப்புக்கும், மடிஞ்ச எங்க சொந்தங்களுக்கும் மரியாதை செய்றவிதமா நாகப்பட்டினத்தை துறைமுகமா மாற்ற அரசியல்வாதிகள் முயற்சி எடுக்கணும். அதுக்கப்புறம் எங்க வளர்ச்சி எக்கச்சக்கமாகிடும்" என்கிறார்கள், மீனை நம்பி வாழும் அத்தனை பேரும்.

இதற்கான முயற்சிகளை ஆரம்பம் தொட்டே முடுக்கிவிட்டுக் கொண்டிருக் கும் நாகை தொகுதியின் தி.மு.கழக எம்.பி யான ஏ.கே.எஸ்.விஜயன், ‘‘கப்பல் போக்குவரத்துத் துறையின் மத்திய அமைச்சரான டி.ஆர்.பாலு, துறைமுகம் அமைக்கத் தயாராக இருக்கிறார். ஆனால், எதிலுமே வழக்கம்போல் சுணக்கம் காட்டும் தமிழக அரசின் போக்குதான் இந்த முயற்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பெயரளவிலான தீர்வுகளை மட்டுமே செய்யும் தமிழக அரசு, ஏன் இந்த விஷயத்தில் அக்கறை இல்லாமல் இருக்கிறது? தமிழக அரசு இன்றைக்குத் ‘தடையில்லா சான்றிதழ்' வழங்கினால், நாளையே துறைமுகப் பணிகளை ஆரம்பிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று ஆதங்கம் பொங்கச் சொன்னார்.


1 comment:

வடுவூர் குமார் said...

நல்லது நடந்தால் சரி தான்.
தூங்கி வழியும் ஊர் என்ற பெயர் மாறினால் சரி.